2010-01-23 14:37:25

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இந்த ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களே, உங்கள் அனைவரையும் ஒரு கற்பனை வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நமக்கு வகுப்பு நடத்தப்போகும் ஆசிரியர் யார் தெரியுமா? சரியாகச் சொன்னீர்கள்.. இயேசு.
நாம் அனைவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில், படபடப்பில், எதிர்பார்ப்பில்... கொஞ்சம் பக்தியிலும் கூட அங்கே அமர்ந்திருக்கிறோம். இயேசு வகுப்பறைக்குள் வருகிறார். ஒரே ஆரவாரம், கைதட்டல், வரவேற்பு. இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்தபின், இயேசு நம்மை பார்த்து எடுத்த எடுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்: “இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேர் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?” இது தான் அவரது கேள்வி. கேள்வியின் அர்த்தம் சரிவரத் தெரியவில்லை. நமது புருவங்கள் சுருங்குகின்றன. ஆனாலும், அனைவரும் கைகளை உயர்த்துகிறோம். இயேசு ஒரு புன்முறுவலுடன், "என் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு, பிறகு கைகளைத் தூக்குங்கள். மீண்டும் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் உண்மையில் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?" இயேசு 'இன்றைக்கு' என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். இயேசு தொடர்ந்து பொறுமையாய் விளக்குகிறார். "இன்றைக்கு வாழ்வதென்பது, நேற்றைய நினைவுகளில் சிக்கிக்கொண்டோ, நாளையக் கனவுகளைத் தாங்கிக்கொண்டோ வாழ்வதல்ல. இன்றைய நாளின், நிகழ் காலத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும், நொடியிலும் வாழ்வது. உங்களில் எத்தனை பேர் இந்த வகுப்பில், இந்த நேரத்தில் முழுமையாக இங்கு இருக்கிறீர்கள், முழுமையாக வாழ்கிறீர்கள்?.." என்று இயேசு விளக்கம் சொல்லி, கேள்வியை மீண்டும் கேட்கும் போது உயர்த்தப்பட்ட நமது கைகள் ஒவ்வொன்றாய் கீழே இறங்குகின்றன.
அன்புள்ளங்களே, இன்றைய நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல.
நம் கற்பனை வகுப்பில் சொல்லித்தந்த இந்த பாடத்தை அன்று நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலும் தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார் இயேசு. அந்த நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்திக்குச் செவி மடுப்போம்.
நற்செய்தி - லூக்கா 4: 16-21 
இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு, நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்து விட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர். வாழ்ந்தும் காட்டியவர்.
இயேசு உலகில் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவைகளைச் சிந்தித்தால், அவர் நிகழ் காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு சில.
நாம் கடந்த விவிலியத் தேடல்களிலும், ஞாயிறு சிந்தனையிலும் பகிர்ந்து கொண்ட அந்தக் கானாவூர் திருமணப் புதுமை இயேசுவின் முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் போது, "நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்." என்று சொல்லாமல், (லூக்கா 17:14) நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள் என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள். போகும் வழியில் குணமடைந்தார்கள். இதே போல், (மத்தேயு 9:6) முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (மாற்கு 6:38) "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்றே, இப்போதே எங்களுக்கு உணவைத் தாரும், தந்தையே என்று வேண்ட சொல்லித்தந்தார்.
இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு ஒரு விரக்தியுடன் "என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்." என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு பதில், இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது.  ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.

நிகழ் பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது தினசரி நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
ஒரு சராசரி காலை நேரத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். காலை எழுந்ததும், சுய நினைவு தெளிந்ததும், நேற்றைய நிகழ்வுகள், முக்கியமாக கசப்பான நிகழ்வுகள் நமது நினைவை நிறைக்கும். அல்லது அன்று நாம் எதிர்கொள்ள விருக்கும் வேலைகளைப் பற்றிய கவலைகள் உள்ளத்தை நிறைக்கும்.
நம்மில் எத்தனை பேர் பல் துலக்கும் போது வாயில் நடக்கும் விந்தைகளைச் சிந்திக்கிறோம்? அல்லது முகத்தில் நாம் தெளிக்கும் அந்த நீரினால் அங்குள்ள செல்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து முகமெல்லாம் இரத்த ஓட்டம் பரவுவதை உணர்கிறோம்?
அதன் பின் ஒரு வேளை நாம் ஒரு சில உடல் பயிற்சிகள் செய்தால், உடலின் பல பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெறுவதை எத்தனை பேர் அனுபவித்து, ரசித்திருக்கிறோம்? காலை வேளையில் நம்மில் சிலர் தியானத்திலோ, யோகப் பயிற்சிகளிலோ ஈடுபட்டால், நாம் உள்ளிழுக்கும் சுவாசம் குளிர்ச்சியாகவும், வெளியில் விடும் சுவாசம் சூடாகவும் இருப்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அதன் பின் காபி, காலை உணவு, பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு மேற் கொள்ளும் பயணம் என்று நாம் அனுபவித்து ரசிக்கக் கூடிய ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் ரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக சாப்பிடும் போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப் போய் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப் போல் சாப்பிடுவது மருத்துவ கண்ணோட்டத்தின் படி நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள் தானே. இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில் பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின் விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், மருந்துக்கும் மருத்துவர் பக்கம் போகத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிக பயன் தரும்.
இயேசு நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் வாசித்த ஏசாயாவின் சொற்கள் பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக் கூடியது. அவைகளைப் பற்றி சிந்திக்காமல், இன்று இப்போது என்று நான் பேசியது இன்றைய நற்செய்திக்கு சரியான விளக்கம் இல்லை என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம்.
இயேசுவின் சமுதாயச் சிந்தனைகள் நாம் அடிக்கடி கேட்டும் உணர்ந்தும் உள்ள உண்மைகள். சமுதாய நீதி  பற்றிய கனவுகள் என்றோ எப்போதோ நனவாகும் என்று எண்ணிக் கொண்டிருந்த, வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இயேசு கொடுத்த இன்றைய, இப்போதைய பாடங்கள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்து விட்டது என்பதை அவர்கள் நம்ப வைத்தது இயேசுவின் முதல் வெற்றி என நான் நினைக்கிறேன். இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால், அப்படி நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், அந்த ஈடுபாடு நாம், நமது என்ற குறுகிய வட்டத்தை விட்டு நம்மை வெளியேற வைக்கும். சமுதாய ஈடுபாட்டையும் வளர்க்கும். ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல் படுவோம். தீர்வுகளை அன்றே காண்போம். குறையற்ற சமுதாயம் உறுதியாக உருவாகும். ‘உருவாகும்’ என்பது எதிர்காலம். சீரியதொரு சமுதாயம் உருவாகிறது. உருவாகிவிட்டது. நல்லவைகள் நடக்கின்றன என்று நம்புகின்றோம்.







All the contents on this site are copyrighted ©.