மியான்மாரில் கத்தோலிக்கருக்கும் பிரிந்த கிறிஸ்தவசபையினருக்குமிடையே ஒத்துழைப்பை
ஏற்படுத்துவதற்கு திருச்சபை தொடர்ந்து முயற்சி
சன.22,2010 கத்தோலிக்கருக்கும் பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்குமிடையே இறையியல் சார்ந்த
கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும் மியான்மாரில் வாழும் இவ்விரு சபையினரும் தங்களுக்கிடையே
ஒத்துழைப்பையும் ஒன்றிப்பையும் கட்டி எழுப்புவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்
என்று அந்நாட்டு குரு ஒருவர் கூறினார். உலகில் கிறிஸ்தவர்கள் சனவரி 18 முதல் 25 வரை
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைபிடித்துவரும் இவ்வேளையில் மியான்மாரில் கத்தோலிக்க
மற்றும் பிரிந்த கிறிஸ்தவசபைகளுக்கான குழுவின் செயலர் அருள்திரு ஜோசப் மாங் வின் இவ்வாறு
கூறினார். மியான்மாரை நர்கீஸ் புயல் தாக்கியபோது கத்தோலிக்கரும் பிரிந்த கிறிஸ்தவசபையினரும்
காட்டிய ஒத்துழைப்பு, இதற்குச் சான்றாக இருந்தது என்றும் அக்குரு தெரிவித்தார்.1968ம்
ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபையும் உலக கிறிஸ்தவசபைகள் அவையும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை
உலக அளவில் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கத் தொடங்கியது. எனினும் மியான்மாரில் 1966ம்
ஆண்டிலிருந்தே இவ்விரு சபைகளும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக ஒன்றிணைந்த செபவழிபாடுகளை நடத்தி
வருவதாக குரு மாங் வின் அறிவித்தார்.