சன.18,2010 இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகளை ஏற்றுள்ள யூதமும், கிறிஸ்தவமும் கடவுளுக்காகவும்,
வாழ்வுக்காகவும், குடும்பத்திற்காகவும் இணைந்து உழைக்க முடியும், உழைக்க வேண்டும் என
அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட். ரோம் நகரின் யூதக் கோவிலை இஞ்ஞாயிறன்று சென்று தரிசித்த திருத்தந்தை,
இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகள் மனித குலமனைத்திற்குமான ஒழுக்க ரீதி விதிகளாக இருப்பதாகவும் சரியான மனச்சான்றிற்கான
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக உள்ளதாகவும் கூறினார். கடந்த கால யூத விரோதப்போக்கின் கொடுஞ்செயல்களைத்
தடுக்கத் தவறியதற்காக ஏற்கனவே மன்னிப்பை வேண்டியுள்ளத் திருச்சபை, இக்காயங்கள் நிரந்தரமாக
குணப்படுத்தப்படும் என உறுதியாக நம்புவதாகவும் கூறினார் திருத்தந்தை. கடந்த காலங்களில் திருத்தந்தை
இரண்டாம் அருள் சின்னப்பர் யூத மக்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கக் காட்டிய ஆர்வத்தையும், எடுத்த முயற்சிகளையும் சுட்டிக்
காட்டிய பாப்பிறை 16ம் பெனெடிக்ட், தன் பாப்பிறை பதவி காலத்திலும் அத்தகைய முயற்சிகளைத்
தொடர்ந்து வருவதாகக் கூறினார். ஏற்கனவே ஜெர்மனியின் Cologneலும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் New Yorkலும்
யூத தொழுகைக்கூடங்களைத் தரிசித்துள்ள திருத்தந்தை 16ம் பெனெடிக்ட், இஞ்ஞாயிறன்று ரோம்
யூதத் தொழுகைக் கூடத்திற்கு சென்ற போது, ரோம் யூத சமுதாயத் தலைவர் Riccardo Pacifici இத்தாலிய
கூட்டமைப்பின் தலைவர் Renzo Gattegna ரோமையின் யூதத் தலைமைக் குரு Riccardo di Segni ஆகியோர் திருத்தந்தையை
வரவேற்று அழைத்துச் சென்றனர். யூதத் தொழுகைக் கூடத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அங்கிருந்த
இரு முக்கிய சரித்திர நினைவுப் பலகைகள் மீது மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார் பாப்பிறை.