ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது
பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் இமயமலை போல் தெரிந்ததால் எங்கு எப்படி
ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவன் கடற்கரையில்
எதையோ பொறுக்கி எடுத்து கடலில் எறிந்து கொண்டிருந்தார். அறிவாளி கூர்ந்து கவனித்த போது, அந்த மீனவன்
கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச்
சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்ததைப் பார்த்தார். "என்ன செய்கிறீர் நண்பரே?"
என்று கேட்டார் அறிவாளி. மீனவன் அவரிடம், "கடல் நீர்மட்டம் குறைந்து விட்டதால், இந்த
மீன்கள் கரையில் ஒதுங்கி விட்டன. இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை
மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்." என்றார். "அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால்
என்ன பயன்? இந்தக் கடற்கரையில் பல ஆயிரம் மீன்கள் கரையில் கிடக்கின்றனவே. இது போல் உலகத்தின்
பல கடற்கரைகளில் மீன்கள் கிடக்கின்றனவே. உமது இந்த செயலால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற
முடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டபோது, அந்த மீனவன், "எல்லா மீனையும் காப்பாற்ற
முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்ற முடியும்." என்று
சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தாராம்.நல்ல செயல்களை யாராவது ஒருவர், எங்காவது
ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தால் போதுமே.