எகிப்தில் கிறிஸ்துமஸ் துப்பாக்கிச் சூட்டில் கிறிஸ்தவர்கள் மரணம்
சன.07,2010 இப்புதனன்று கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பித்த எகிப்து காப்டிக் கிறிஸ்தவ
சபையின் கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலிக்குப் பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில்
எட்டு கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர். எகிப்தின் தென்பகுதியிலுள்ள நஜ் ஹம்மாடி எனுமிடத்தில்
காப்டிக் கிறிஸ்தவர்கள் நள்ளிரவுத் திருப்பலியை முடித்து புதன் அதிகாலை வெளியே வந்து
கொண்டிருந்த போது காரில் வந்த ஒருசிலர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு
மறைந்துள்ளனர். எட்டுப் பேரின் உயிரிழப்புக்கும் பத்துப் பேர் காயமடைவதற்கும் காரணமான
இத்துப்பாக்கிச் சூடு குறித்து எடுத்துரைத்த அப்பகுதி ஆயர் கிரோலோஸ், ஏற்கனவே சிலமுறை
மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறினார்.எகிப்தின் சுமார் எட்டு கோடி மக்கட்தொகையில் பத்து
விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.