2010-01-05 15:28:39

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முழுவீச்சுடன் செயல்படுவதற்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை உறுதி


சன.05,2009 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முழுவீச்சுடன் செயல்படுவதற்கு உறுதி அளித்துள்ளார் பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை அதிகாரி ஒருவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் பேசிய பிலிப்பைன்ஸின் செபு பேராயர் கர்தினால் ரிக்கார்தோ விதால், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வியை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குச் செயல் திட்டம் வகுப்பதற்குமெனத் தனது உயர்மறைமாவட்டத்தில் ஒரு குழுவை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில் பங்குக் குருக்கள் நகர மேயர்களோடும் உதவி மேயர்களோடும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் கர்தினால் தெரிவித்தார்.

செபு உயர்மறைமாவட்டத்தில் இடம் பெறும் வளர்ச்சித் திட்டங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்குத் தலத்திருச்சபை ஆதரவு வழங்குகின்றது என்றும் கர்தினால் விதால் கூறினார்.

சுற்றுச்சூழலை நட்போடு கையாளும் வாழ்க்கையை அமைக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார் பிலிப்பைன்ஸ் கர்தினால் விதால்.








All the contents on this site are copyrighted ©.