2009-12-29 15:15:04

இந்தோனேசிய வகுப்புவாத வன்முறைக்கு குடியரசுத் தலைவர் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கண்டனம்


டிச.29,2009 இந்தோனேசியாவில் இடம் பெறும் வகுப்புவாத வன்முறையை, தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கண்டித்துள்ளார் அந்நாட்டு குடியரசுத் தலைவர் Susilo Bambang Yudhoyono.

டிசம்பர் 27ம் தேதி தேசிய அளவில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ, குடிமக்கள், உலகளாவிய சமயப் போதனைக்கு எதிராகச் செல்லும் எந்த நடவடிக்கையையும் தவிர்த்து நடக்குமாறு வலியுறுத்தினார்.

மேற்கு ஜாவாவின் பெக்காசியில் புனித ஆல்பெர்ட் ஆலயத்தை வன்முறைக் கும்பல் ஒன்று அண்மையில் தாக்கியதில் 6,200 டாலர் பெறுமான சேதம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய வன்முறைச் செயல்களைக் கண்டித்துப் பேசிய அவர், இவை, அனைத்து மதங்களின் அறநெறிப் போதனைகளுக்கு எதிராகச் செல்கின்றன என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் மையப் பொருளான, “ஆண்டவர் அனைவருக்கும் நல்லவர்” என்ற தலைப்பைக் குறிப்பிட்டு பேசிய சுசிலோ, இந்தோனேசியாவின் 1945ம் ஆண்டு அரசியல் அமைப்பையும் பஞ்சசீலக் கொள்கைகளையும் மதித்து நடக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தோனேசியா, உலகில் அதிகமான முஸ்லீம்களைக் கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.