திருவருகைகாலச் சிந்தனை தயாரித்தவர் அருள்தந்தை இம்மானுவேல் சே.ச.,வாசிப்பவர் அருள்தந்தை
பெர்னார்டின் ம.ஊ.ச. கொண்டாடுவோம் நமக்காக
மீட்பர் பிறந்துள்ளார் என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. குழந்தை வடிவில் வந்துள்ள
இயேசு பாலனின் பிறப்பு நமக்கு ஒரு மாபெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தி. இக்குழந்தை தரும்
சவால்-நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்பதே. குழந்தை வடிவில்
பிறந்த ஆண்டவர் இயேசு நாமும் குழந்தைகளாக மாற அழைப்பு விடுக்கின்றார். நாம் மீண்டும்
குழந்தைகளாக மாற முடியாது. எனினும், நம்மிடம் இருக்கும் குழந்தை உள்ளத்தைக் கொண்டாட இயேசு
அழைப்பு விடுக்கின்றார். குழந்தைத்தனத்தைக் கொண்டாடுவோம். குழந்தைச் செல்வங்களைக் கொண்டாடுவோம்.
இயேசுதரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோம். நம்மோடு வாழ்பவர்களோடு இம்மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.