திருவருகைகாலச் சிந்தனை - தயாரித்தவர் அருள்தந்தை இம்மானுவேல் சே.ச
வாசிப்பவர்
அருள்தந்தை பெர்னார்டின் ம.ஊ.ச.
பகிர்ந்து வாழ்வது
பகிர்நது
வாழும் போது நாம் பேறுபெற்றவர்களாகிறோம். அன்னைமரியா எலிசபெத்தம்மாளை சந்தித்து தனது
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். இப்பகிர்வில் அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்படைகிறது.
இம்மகிழ்ச்சிப் பரிமாற்றத்தால் எலிசபெத்தம்மாளின் வயிற்றில் வளர்ந்த குழந்தையும் மகிழ்ச்சியால்
துள்ளிற்று. அன்னைமரியா மூன்று மாதங்கள் எலிசபெத்தம்மாளுடன் தங்கி பணி செய்தார். அது
எலிசபெத்தம்மாளுக்கு ஓர் இக்கட்டான காலம். தன் தலைச்சன் குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்.
இப்படிப்பட்ட தருவாயில் உதவுவது என்பது ஒரு மகத்தான உதவியாகும். இப்பகிர்வு, நேரத்தை
மட்டும் பகிர்ந்தது அல்ல, அன்பைப் பகிர்ந்தது, உதவியைப் பகிர்ந்தது, உறவைப் பகிர்ந்தது.
இப்படிப்பட்ட பகிர்வால் அன்னைமரியா பெண்களுக்குள் பேறுபெற்றவராகக் கருதப்படுகிறார். அன்னைமரியாவைப்
போல நாமும் பொருட்களை மட்டுமல்லாமல் நமது நேரத்தை, நமது அன்பை, நமது உதவிகளை, நமது உறவை
பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது நாமும் பேறுபெற்றவர்களாகிறோம். அன்னைமரியாவைப் போல
பகிர்ந்திடுவோம். பேறுபெற்றவர்களாக வாழ்ந்திடுவோம்