டிசம்பர் 11. திருவருகைகாலச் சிந்தனை வழங்குபவர் அருள்தந்தை டாம்னிக் சே.ச அப்போது
நான் சிறுவனாய் இருந்தேன். மாலை பள்ளி முடிந்த பின்பு பம்பரம், கோலி குண்டு, குச்சி விளையாட்டு
என்ற வெவ்வேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். விளையாட்டில் வெற்றி பெறும் போது, ரொம்ப
சந்தோஷப்படுவேன். ஆனால் தோற்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். மீண்டும் மீண்டும்
தோற்கும் போது, எதுவுமே சம்பந்தமே இல்லாத காரணம் சொல்லி விளையாட மறுத்துவிடுவேன். பொறுப்பற்ற
பதில். குழந்தைத்தான விளையாட்டு இது. தங்கள் செயலுக்கு பொறுப்பேற்காமல், குழந்தைத்தனமான
வாழ்பவர்களை மத்தேயு நற்செய்தியாளர் படம் பிடித்து காட்டுகிறார். இம்மனிதர்கள் எதிலுமே
குறைகாண்பவர்கள். எதற்குமே ஒரு சம்பந்தமில்லாத காரண காரியத்தைக் கண்டுபிடிப்பவர்கள்.
எதற்குமே தயாரக நொண்டிச்சாக்கு சொல்பவர்கள். மொட்டைத்தலைக்கும் முருங்க மரத்துக்கும்
முடிச்சுபொடுபவர்கள். சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் தெரிந்த மேதாவிகள். இவர்களுக்குத்
தெரியாதது எதுவுமே உண்மையில்லை என்று அடித்துச்சொல்பவர்கள். உண்மையை உற்றுநோக்க ஆணவம்
இவர்களின் கண்களை மறைக்கும். பிறரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள கொளரவம் இவர்களைத் தடுக்கும்.
அதனால்தான் இவர்கள் திருமுழுக்கு யோவானை பேய்பிடித்தவன் என்றழைத்தார்கள். இயேசுவை பைத்தியக்காரன்
என்றழைத்தார்கள். இறைவா, பிறரில் உம்மைக்காண எம் கண்களைத் திறந்துவிடு. பிறரின்
அழுகையில் உம் குரலைக் கேட்க எம் செவிகளைத் திறந்துவிடு.