டிச.11,2009 இலங்கை சிறைச்சாலைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி; வவுனியாவில் இவ்வியாழனன்று அமைதிப்பேரணி நடைபெற்றுள்ளது.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்தப்பேரணி நடந்தது. அரசியல் கைதிகளின்
உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணி வவுனியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணையக அலுவலகத்தின்
எதிரில் இருந்து ஆரம்பமாகி வவுனியா அரசு செயலகத்தில் சென்று முடிவடைந்தது. மனித உரிமைகள்
அமைச்சருக்கு எழுதப்பட்ட கோரிக்கைகள் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் மனித உரிமைகள்
ஆணையகத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்த
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் அரசியல் கைதிகள்
தொடர்பாக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.