2009-12-04 16:59:02

கோப்பன்ஹாகன் வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில் வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கின்றது


டிச.04,2009 வருகிற திங்களன்று, டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹாகனில் துவங்கவிருக்கும் உலக வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் உட்பட வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கலந்து கொள்ளவிருக்கின்றது.

இம்மாதம் 7 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே தலைமையில் ஐந்து பேர் கலந்து கொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.

இன்னும், செனகல், பொலிவியா, பங்களாதேஷ் (Senegal, Bolivia, Bangladesh) உள்ளிட்ட 40 நாடுகலின் சுமார் 165 இளையோரும் இதில் கலந்து கொள்வதற்கு, சிறார் வெப்பநிலை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

2020ம் ஆண்டுக்குள் வளரும் நாடுகள் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்துவதற்கு உதவியாக, அந்நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு குறைந்தது 195 பில்லியன் டாலரை வழங்க உறுதி அளிக்கும் என இவ்வுலக மாநாட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வெப்பநிலையை 2 செல்சியுஸ் அளவுக்கு குறைக்கவும், 2013க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.