சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நாள் - ஐ.நா. பொதுச்செயலர் அறிக்கை
டிச.02,2009 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகின்றது. பாலியல் தொழிலிலும்,
அடிமைத் தொழில்களிலும் வற்புறுத்தப்படுவோரை விடுவிக்கும் நோக்கத்தோடு ஐ.நா. வின் பொது அவை 1949ஆம்
ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவு கூறும் வண்ணம் இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிமைத்தனம்
பெருமளவு பல நாடுகளிலிருந்தும் ஒழிக்கப்பட்டாலும், புது வகையான அடிமைத்தனங்கள் பல நாடுகளில்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது கவலை தரும் ஒரு போக்காகும் என்று குறிப்பிட்டுள்ளார். உலகமயமாக்கல்
பெருகி வரும் இந்நாட்களில், உலகின் பல நாடுகளிலும் கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள்,
சிறுவயது போராளிகள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர், சிறுமியர் என்று
பல வழிகளில் அடிமைத்தனம் இன்றும் பெருகி வருவதை நம் சந்ததியினர் தடுத்தி நிறுத்தியே ஆகவேண்டும்
என பான் கி மூன் அழைப்பு விடுத்துள்ளார். ஏழ்மை, படிப்பறிவின்மை ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும்,
பெண்கள், சிறுவர் சிறுமியர் ஆகியோரும் இந்த நவீன அடிமைத்தனத்திற்கு பெருமளவில் ஆளாகின்றனர்
என்று ஐ.நா. பொதுச்செயலர் சுட்டிக் காட்டினார்