ரோமை நகரில் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள், இங்குள்ளத் திருத்தலங்களைப் பார்க்க
வரும் திருப்பயணிகள் என்று கூட்டம் அலைமோதும். இப்படி வந்த ஒரு பயணி அணிந்திருந்த T shirt
இல் நான் கண்ட வாக்கியம் இது: PROTECT ME FROM WHAT I WANT. "நான் விரும்பித் தேடுபவைகளிலிருந்து என்னைக்
காப்பாற்றுங்கள்." அவர் யாருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறார்? தன் குடும்பத்திற்கா?
நண்பர்களுக்கா? அல்லது கடவுளுக்கா? சரியாகத் தெரியவில்லை. அவரிடம் கேட்க நினைத்தேன். ஆனால்,
ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் பலசாலியாக இருந்ததால், ஒதுங்கி விட்டேன். "நான் விரும்பித்
தேடுபவைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." வேடிக்கை, வேதனை என்று பல கோணங்களில் இந்த
வாக்கியம் என்னைச் சிந்திக்க வைத்தது. நானே விரும்பி, தேடிச் செல்லும் போது ஏன் இன்னொருவர் வந்து என்னைக்
காப்பாற்ற வேண்டும்? விரும்புவது, தேடுவது எல்லாமே நல்லவைகளாக இருந்தால், இந்தக் கேள்வி,
பயம், வேண்டுகோள் எழாது. ஆனால் வாழ்வில் நாம் அனுபவித்த, அனுபவிக்கும் உண்மை என்ன? என்னைப்
பலவந்தமாக யாராவது ஒருவர் நான் விரும்பாத இடத்திற்கு இழுத்துச் சென்றாலோ, அல்லது விரும்பாத
ஒன்றை செய்யக் கட்டாயப்படுத்தினாலோ, மற்றவர்களை உதவிக்குக் கூவி அழைக்கலாம். அனால் நானே
விரும்பி ஒரு இடத்திற்குப் போகும்போது அல்லது ஒன்றைச் செய்யும் போது, "யாராவது காப்பாற்றுங்களேன்"
என்று கத்துவேனா? என் கையை நானே பலவந்தமாக முறுக்கிக் கொண்டு, அல்லது என் கண்ணை நானே
குத்திக்கொண்டு "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் வாய் கத்தியதில்லை. ஆனால்,
என் உள்மனம்? கத்தியிருக்கிறது... ஆரம்பத்தில் அழகாக, நல்லது போல் தோன்றியப் பல விஷயங்கள்
போகப் போக பயத்தை உண்டாக்கியது. பகலிலும் இரவிலும் இந்த பயம் துரத்தியது... கத்தி யாரையாவது
கூப்பிடலாம் என்றால், அதற்கும் பயம்... எரிகின்ற நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த
அழகைத் தேடிச் செல்லும் விட்டில் பூச்சிகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். பூச்சிகள் பாவம் அவைகள்
இறப்பதை தடுக்க நம்மால் ஒருவேளை முடியாமல் போகலாம். அதே நெருப்பைத் தேடி நம் வீட்டில்
ஒரு குழந்தைப் போகும் போது, பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? ஓடிச் சென்று காப்பாற்றுவோம்.
ஆனால், அதே நெருப்பை நாடி வயதுக்கு வந்த அல்லது வயது முதிர்ந்த ஒருவர் செல்லும் போது,
தடுக்கப் பார்ப்போம், அந்த நேரத்தில், தடுக்கும் நம்மைத் தள்ளி விட்டு அவர் அந்த நெருப்புக்குள்
புகுந்தால்... இந்த ஆளுக்கென்ன, பேய் பிடிச்சிடிச்சா? என்று சிந்திக்க மாட்டோமா? பேய் பிடித்த ஒருவரை...
இல்லை, இல்லை... பேய்கள் பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையை இன்றைய விவிலியத்
தேடலில் சிந்திப்போம். விரும்புதல், தேடுதல் என்று ஆரம்பித்துவிட்டு, ஏன் திடீரென பேய்
பிடிப்பது பற்றி பேச ஆரம்பித்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். இரண்டுக்கும் தொடர்பு இருப்பதைப்
பார்க்கிறேன். பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வழக்கமாக
இவர்கள் சுய நினைவு இல்லாமல், தங்கள் கட்டுப்பாட்டில் தாங்கள் இல்லாமல், வேறு ஒருவருடைய
கட்டுப்பாட்டில் இருப்பது போல பேசுவார்கள், செயல்படுவார்கள். ஒரு சில கோவில்களில் இவர்களுக்கென
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை, அங்கு கட்டப்பட்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்,
பயந்திருக்கிறேன், வேதனை அடைந்திருக்கிறேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில்
இப்படி கட்டப்பட்ட பலர் தீவிபத்தில் உடல் கருகி இறந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்.
தீய ஆவியால் கட்டுண்ட ஒருவரைப் பற்றி இன்றைய நற்செய்தியின் ஒரு பகுதி சொல்கிறது.
மாற்கு நற்செய்தி 5 1-20 அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர்
பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து
அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும்
சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும்
கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும்
அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக்
கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
பயம், பரிதாபம் என்று
பல உணர்வுகளை எழுப்பும் ஒரு காட்சி இது. இப்படி ஒருவரை வாழ்க்கையில் சந்தித்தபோதெல்லாம் என் மனதில் மேலோங்கி
இருந்த ஒரு எண்ணம் - அந்த ஆளைவிட்டு, அந்த இடத்தை விட்டு தூரமாய் சென்று விட வேண்டும்.
பொதுவாகவே, தீய சக்தி எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த சக்திக்கு முன் நமது முதல்
பதில்? ஓட்டம், அந்த இடத்தை விட்டு விலகுதல். ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று
சிறுவயது முதல் சொல்லித் தரப்படும் பழமொழி, பாடம்... தீய சக்தியைச் சந்தித்ததும், என்
விசுவாசம் விடைபெற்று போய் விடுகிறது. தீய சக்திகளுக்கு முன்னால் துணிந்து நிற்க முடியாமல் பின் வாங்குவது,
அந்த சக்திகளுக்கு நாம் தரும் வெற்றி. தீய சக்தியை இயேசு சந்தித்த போது, அவருடைய பதில் என்ன?
நற்செய்தி படம் பிடித்து காட்டுகிறது.
நற்செய்தி தீய ஆவி பிடித்தவர்
தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே,
உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில்
கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார்.
அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில்
நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று
அவரை வருந்தி வேண்டினார். (இலேகியோன் என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட
பெரும் படைப் பிரிவு.)
6000 பேர் ஒரு மனிதரில், ஒரு மனதில் குடிகொள்ள முடியுமா?
முடியும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒருவராகப் பிறக்கிறோம். ஆனால், வளரும்போது,
அவரைப் போல, இவரைப் போல என்று எத்தனை பேராக மாறத் துடிக்கிறோம். நம் குடும்பத்தில் அல்லது
பள்ளியில் அடுத்தவரோடு நம்மை ஒப்புமைப் படுத்தி, “அவனப்பாரு, அவளப்பாரு... நீயும் இருக்கியே” என்று
குற்றப் பத்திரிக்கைகள் வாசிக்கப்படும் போது, அவனாக, அவளாக மாற விரும்புகிறோம். இல்லையா? பலர் வளரும்போது
அவரது பெயர்களே மறைந்து, மறந்து போகும் அளவு மற்ற கீழ்த்தரமான பெயர்களால், அடைமொழிகளால்
அழைக்கப்படுகின்றனர்? இப்படி வளரும் ஒரு குழந்தை தன் சொந்த உருவை, தன் சொந்த பெயரை, தன்
சொந்த இயல்பை புதைத்துவிட்டு மற்ற முகமூடிகளை அணிந்து கொள்ள முற்படுகிறது. இந்த முகமூடிகளே அந்த
குழந்தையின் அடையாளங்களாக மாறும் போது, அவராக, இவராக இருக்கலாமே என்று ஆரம்பித்து ஆயிரமாயிரம்
அடையாளங்களைத் தாங்கி வாழ ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேளை, இன்றைய நற்செய்தியில் நாம்
வாசித்த இந்த மனிதரும் அப்படி பலராக வாழப் பழகி அதுவே அவரது வாழ்வாகி விட்டதென நினைக்கிறேன். வாழும்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பலராக வாழ்வதை, மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால்,
Split Personaltiy, அல்லது Multiple personality Disorder என்று அழைப்பர். 6000 பேரை
உடலில், மனதில் தாங்கி போராடி வந்தவரைக் குணமாக்குகிறார் இயேசு. படையாக வந்த தீய சக்திகள் சாதாரணமாகப்
போகவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் பன்றிகளை அழித்துவிட்டுச் சென்றன. அந்த மனிதருக்குக்
கிடைத்த விடுதலையைக் கண்ட அவரது குடும்பம் ஒருவேளை நிம்மதி அடைந்திருக்கும். ஆனால், ஊரிலிருந்த
மற்றவர்களுக்கு? அவர்கள் அச்சமுற்றார்கள், இயேசுவை ஊரைவிட்டு போய்விடுமாறு வேண்டிக்கொண்டார்கள்
என்று நற்செய்தி கூறுகிறது.
நற்செய்தி அங்கே மலைப்பகுதியில் பன்றிகள்
பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை
அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.
பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள்
அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள்.
நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர்,
அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக்
கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும்
நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப்
போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர்
தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல்,
அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம்
உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி
நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
ஒருவனைக் காப்பாற்ற 2000 பன்றிகளா?
கணக்கு சரியில்லையே. நல்லது ஒன்று நடக்க, எதையும், எவ்வளவும் தியாகம் செய்யலாம் என்பது ஒரு கண்ணோட்டம்.
எள்ளளவு தியாகம் செய்தாலும் பெருமளவு லாபம் கிடைக்க வேண்டும் என்பது மற்றொரு கண்ணோட்டம்.
ஒன்று வியாபாரம், மற்றொன்று வாழ்க்கை. வாழ்க்கையே பலருக்கு வியாபாரமாகிப் போகும்போது
கணக்கு பார்ப்பது ரொம்ப, ரொம்ப முக்கியமாகிப் போகிறது. சென்ற வார விவிலியத் தேடலில்
போதை பழக்கத்திலிருந்து விடுபட மெக்ஸிகோவின் மருத்துவ மனையொன்றில் போராடிக் கொண்டிருந்த
17 இளையோரைச் சுட்டுக் கொன்ற போதைபொருள் வியாபாரிகளை நினைவிருக்கிறதா? அதுபோலவே, இன்னும்
பல நோய்கள், தீயபழக்கங்களிருந்து மனித குலம் மீண்டு வருவது, விடுதலை அடைவது பலருக்கு
வருத்தமாக இருக்கும். இயேசுவைப் போல் அந்த நன்மைகளைச் செய்யும் பலரை அந்த இடத்தை விட்டு போகச்
சொல்வார்கள், அப்படி செய்யாமல் அந்த நல்ல உள்ளங்கள் தொடர்ந்து சேவைகளைத் தொடர்ந்தால், அவர்களைக் கொல்லவும்
தயங்க மாட்டார்கள் இந்த வியாபாரிகள். இந்த வியாபாரிகள் விற்பனையைத் துவங்க முன் தங்கள்
மனசாட்சியை விற்று விட்டு பின்னரே வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். மனித குலத்தில் பகமை,
வெறுப்பு, பழிக்குப் பழி இவற்றை வளர்த்து, ஊர் முழுவதையும், நாடு முழுவதையும் கல்லறையாக்கி, அங்குள்ளவர்கள் கல்லறைகளில் இரவும் பகலும்
ஓலமிட்டு வாழ்வதை வைத்து லாபம் சம்பாதிக்கும் இந்த வியாபாரிகளைப் பிடித்திருக்கும் பல
தீய சக்திகளை இயேசு போக்க வேண்டுமென வேண்டிக்கொள்வோம்.