நவ.25,2009 பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் எந்தவித அறநெறிகளையோ,
ஆன்மீகக் கோட்பாடுகளையோ சொல்லித்தர தவறி வருகிறதென ஸ்பெயினின், மாட்ரிட் பேராயர் கர்தினால்
அந்தோனியோ ரொவுக்கோ வரேலா (Antonio Rouco Varela) தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த
ஸ்பானிய ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் வரேலா இப்போது நிலவும்
கல்வித் திட்டங்கள், பல இளையோர் படிப்பை முடிக்க இயலாமல் போவதற்கும், பள்ளிகளில் நிலவும்
வன்முறைகளுக்கும் காரணமாகின்றன எனக் குறை கூறியுள்ளார். பாலியல் குறித்து சொல்லித்தரப்படும் பாடங்கள் எவ்வித
அறநெறியையும் பின்பற்றாமல் இருப்பது கவலையைத் தரும் ஒரு போக்கு என்றும் அவர் கூறினார்.
2004ஆம் ஆண்டு முதல் அரசும் திருச்சபையும் பல கருத்துகளில் வேறுபட்டு இருந்து வருவது
நல்லதொரு சூழல் இல்லையெனக் கூறிய ஆயர் பேரவை, ஸ்பெயினில் பள்ளிகளில் மறைகல்வி நிறுத்தப்பட்டதற்குத் தாங்கள்
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளது.