நவ.25,2009 இலங்கையில் போரினால் அனைத்தையும் இழந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்த அரசு
மேற்கொண்டுள்ள முயற்சிகளில் பெரும் குழப்பம் நிலவி வருவதாகவும், இது நாளுக்கு நாள் மோசமடைந்து
வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் செயல்படும் காரித்தாஸ் மற்றும் பல கத்தோலிக்க சமூகச் சேவை
நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. யாழ்ப்பாணம் விளையாட்டுத் திடலில் எந்தவித அடிப்படை
வசதிகளும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள
இச்சமூகச் சேவை நிறுவனங்கள், இம்மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வதில் அரசு இன்னும்
அதிகம் திறமையோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. மே மாதத்தில் நடந்து முடிந்த உள்நாட்டு
போரின் விளைவாக ஏறத்தாழ 2 லட்சத்து 60 ஆயிரம் பேர்வரையில் அனைத்தையும் இழந்துள்ள நிலையில்,
அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் திருப்தி தரும் வகையில் இல்லாததைப் பல நாடுகளின்
அரசுகள் குறை கூறியுள்ளன. இப்பணிகளைத் தீவிரமாக்கவும் இவ்வரசுகள் இலங்கை அரசை வற்புறுத்தி
வருகின்றன.