ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில் வலது கை சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமையை
சென்ற வார விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இயேசு அந்த நன்மையைச் செய்தபோது, அதைப் பார்த்த
மறைநூல் வல்லுனரும், பரிசேயரும் இயேசுவின் மீது கோப வெறி கொண்டதாக லூக்க நற்செய்தியில்
வாசித்தோம். அவர்கள் கோப வெறி கொண்டதைக் கேள்விப்பட்டு, நாம் கோபமடைந்தோம். போன வார விவிலியத்
தேடலில் நான் கூறிய இறுதி வரிகளை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு மனிதர் நல்லது
செய்யும் போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன
செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? தயவுசெய்து உடனே நீதி இருக்கையில்
அமர்ந்து, தீர்ப்பை வாசித்து விட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா?
இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர் பக்கம்
இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே. அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல்
அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம். பரிசெயர்களின் பக்கம் தான் என்ன? இயேசு குணமளிக்கிறார்,
போதிக்கிறார் என்பதெல்லாம் பரிசேயர், மறைநூல் அறிஞர்களுக்குப் பிரச்சனை அல்ல. ஒருவேளை
இயேசுவின் புகழ் வெகு வேகமாகப் பரவி வந்ததால், கொஞ்சம் பொறாமை இருந்திருக்கும். அவர்களது
பெரிய பிரச்சனையே இயேசு விதிமுறைகளை மீறுவது தான். மீறுவது மட்டுமல்லாது, அந்த விதிமுறைகளைப்
பற்றிய புதிய பாடங்களை மக்களுக்குச் சொல்லித் தருவதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
அவர்களது கோபத்தையோ அதன் நியாய, அநியாயத்தையோ புரிந்து கொள்வதற்கு முன்னால், இவர்கள் யாரெனப்
புரிந்து கொள்ள முயல்வோம். யூதர்கள் மத்தியில் மதம், கோவில் சம்மந்தமான அனைத்து பணிகளிலும்
ஈடுபட்டவர்கள்: பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்... இவர்கள் அனைவரைப் பற்றியும் புரிந்து
கொள்ள ஒரு விவிலியத் தேடல் பற்றாது. இப்போதைக்கு, இக்குழுவிலிருந்து பரிசேயர்களைப் பற்றி
மட்டும் புரிந்து கொள்ள முயல்வோம். பரிசேயர்கள் என்றதும் நம் மனதில் வில்லன்களைப்
போன்ற உருவங்கள் நிழலாடலாம். வெளிவேடக் காரர்கள் என்று இயேசு இவர்களைச் சாடியது ஒரு காரணமாக
இருக்கலாம். பரிசேயர்கள் அனைவருக்கும் இந்த முத்திரை குத்தி ஒதுக்கி விட வேண்டாம். பரிசேயர்கள்
அடிப்படையில் நல்லவர்கள். கடவுள் கட்டளைகளையும், மோசே தந்த கட்டளைகளையும் மிக நுணுக்கமாக, துல்லியமாகக்
கடைபிடித்தவர்கள்... மக்களும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள். அவர்களைப்
பொறுத்தவரை, கடவுள், அவரது ஆலயம், அவரது கட்டளைகள், தலைமுறை தலைமுறையாய் அவர்கள் கடைபிடித்த
சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் இவை அனைத்தும் முக்கியமானவை, இன்றியமாயதவை, எள்ளளவும் தவறாமல்,
பிசகாமல் வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை... அவர்கள் வளர்ந்ததெல்லாம் இப்படிப்பட்ட ஒரு
பின்னணியில். எனவே, கட்டளைகள், விதிமுறைகள், சடங்குகள், சாத்திரங்கள்.... இவைகளே இவர்களது
வாழ்வாக மாறிவிட்டன. இவர்களது வாழ்வோடு அதிகம் கலந்துவிட்ட, இவர்கள் வாழ்வை அதிகம் ஆக்ரமித்தவை -
ஒய்வு நாள் ஒழுங்குகளும், தொழுகைக்கூட நியதிகளும்... இறைவன் தந்த கட்டளைகளிலேயே மிக முக்கியமாக இவர்கள்
கருதி வந்தது ஒய்வு நாள் கட்டளையே. இதைப் பற்றி விடுதலைப் பயண நூல் கூறுவது இதுதான்:
விடுதலைப்பயணம் 20/1, 8-11 1கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
8ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.9ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து
வேலையையும் செய்வாய்.10ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று
நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள்
இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.11ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில்
விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில்
ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
ஒய்வு
நாளைப் பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியும், இந்த கட்டளையை மீறும் பலரை இவர்கள்
பார்த்து கோபமுற்றனர். ஒய்வு நாள் என்றால் என்ன, அன்று செய்யகூடிய, செய்யக்கூடாத வேலைகள்
என்ன... மக்களுக்கு விளக்கங்கள் தந்தனர். நாளடைவில் இந்த விளக்கங்களே சட்டதிட்டங்களாக மாறின.
ஒய்வு நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடதென்பதை விளக்க இவர்கள் தந்த உதாரணங்களே
பெரியதொரு பட்டியலாக நீண்டது. ஒய்வு நாளில் சமைக்கக் கூடாது, பொருளை சேகரிக்கக் கூடாது,
எதையாவது கைதவறி கீழே போட்டுவிட்டால், குனிந்து எடுக்கக் கூடாது, பயணம் செய்யக்கொட்டது,
பாரம் சுமக்கக் கூடாது... இப்படி ‘கூடாது’ என்ற இந்த பட்டியல் மிக நீளமானது. ஒய்வு நாள்
குறித்த விளக்கங்களில் பரிசேயர், சதுசேயர், மறைநூல் வல்லுநர் இவர்களுக்கிடையே பற்பல சர்ச்சைகள்
எழுந்தன. உதாரணத்திற்கு, ஒய்வு நாளில் எவ்வளவு பாரம் சுமக்கலாம் என்பதற்கு சர்ச்சைகளுக்குப்
பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது: காய்ந்து போன அத்திப் பழம் ஒன்று எவ்வளவு எடையோ, அதுவே ஓய்வுநாளில்
சுமக்க அனுமதிக்கப்படும் எடை. அதற்கு மேல் பாரமான எதையும் எடுக்கவோ, சுமக்கவோ கூடாது. இதேபோல்,
எவ்வளவு தூரம் நடக்கலாம், எவ்வளவு உண்ணலாம், குடிக்கலாம்.... என்று மிகவும் நுணுக்கமான
விதிமுறைகள் எழுந்தன. மோசே வழியாக இறைவன் கொடுத்த ஒய்வு நாள் பற்றிய கட்டளைக்கு மேல்
அலங்கரிக்கப்பட்ட இந்த விளக்கங்கள் அந்த அடிப்படை கட்டளையையே மறைத்து விட்டது. திருநாட்களில்,
ஊர்வலத்தில் கொண்டு செல்ல இறைவனின், அல்லது புனிதர்களின் திரு உருவைத் தேரில் ஏற்றுவோம். அந்தத்
தேர் முழுவதும் அலங்காரத்தால் நிரப்புவோம். இந்த அலங்காரங்கள், பூக்கள் பல சமயங்களில்
அந்த திருஉருவத்தையே மறைத்து விடும், இல்லையா? சில சமயங்களில் இந்த அலங்காரங்களைச் செய்தவர்கள்,
அல்லது பூக்களுக்கு நிதி உதவி செய்தவர்கள் பெயர்கள் தேரில் பெரிதாக எழுதப்படும். இல்லையா?
இறைவனை விட, புனிதர்களை விட பூக்களும், அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகி
விடுவதில்லையா? அதேபோல் தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வு நாள் கட்டளையை விட, அதற்கு சொல்லப்பட்ட
விளக்கங்கள், உதாரணங்கள் பெரும் மலையாக உயர்ந்து விட்டதால், பரிசேயர்களும், மக்களும்
கடவுள் தந்த ஒய்வு நாள் கட்டளைகளை மறந்து விட்டனர். இதைத் தான் இயேசு கடுமையாக எதிர்த்தார். பரிசேயர்கள்
மேல ஏசுவுக்கு இருந்த மற்றொரு கோபம் அவர்கள் மக்களை விட, ஏன் கடவுளை விட சட்டதிட்டங்களுக்குத்
தந்த அளவு கடந்த மதிப்பு. சட்டங்களும் சம்பிரதாயங்களும் பெரிது. மனிதர்களோ, அல்லது அவர்கள்
வாழ்வோ பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென சொல்வது...
அதாவது, சட்டங்களைத் தந்த கடவுளுக்கு இணையாக, சில சமயம் கடவுளுக்கும் மேலாக, சட்டங்களையே
கடவுளாக்குவது மதியற்ற செயல். இதை இயேசு உணர்ந்திருந்தார். பரிசேயரை உணரவைக்க முயன்றார்.
முடியவில்லை. சட்டங்களுக்கு தேவைக்கும் அதிகமாக முதலிடம் தருவதால், நாம் எப்படி சிறைபடுவோம்
என்பதைக் கூறும் ஒரு கதை. எல்லாருக்கும் தெரிந்த கதை. சுருக்கமாக நினைவு படுத்துகிறேன்.
துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து
சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பூஜை நேரத்தில்
கரடி கேட்டிருக்கிறோம். ஆனால், பூஜை நேரத்தில் பூனை? பெரிய குரு அந்தப் பூனையை ஒரு தூணில்
கட்டிவைக்கச் சொன்னார். இப்படி சில நாட்கள் பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம்
கழித்து, பூஜை ஆரம்பிக்கப் போகும் நேரத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள் மடம் எங்கும்
தேடி, பூனையைக் கண்டுபிடித்து கொண்டு வந்து, தூணில் கட்டிவைத்து விட்டு, பூஜையை ஆரம்பித்தனர்.
பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழல் உருவாகி விட்டது. சில ஆண்டுகள் கழித்து, அந்தப்
பூனை இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப்
பூனையைப் போல் இன்னொரு பூனை வங்கி வர அல்லது தேடி கண்டுபிடிக்க சீடர்கள் புறப்பட்டுச்
சென்றனர். அந்தப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்க வேண்டும், அதன் கழுத்தில்
ஒரு கருப்பு வட்டம் இருக்க வேண்டும். மிகவும் முயற்ச்சிகள் எடுத்து பூனையைக் கண்டுபிடித்தனர்.
கொண்டுவந்து மடத்தில் முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் இதைக் கட்டி, பின்னர் பூஜைக்கு
அமர்ந்தார்கள். பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத்
தேவைப்பட்டது. பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழ்நிலை உருவாகிறது. பூனையா? பூஜையா? என்ற
கேள்வி வந்தால், பூனை வென்று விடும். பூஜைகளை மறக்கச் செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது
ஆபத்து என்று இயேசு சொல்லிப் பார்த்தார். பூனையை மறந்துவிட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள்
என்று இயேசு சொல்லிப் பார்த்தார், செயலில் காட்டினார். கடவுள் தந்த ஒய்வு நாள் மனிதருக்கு
நலம் பயக்கும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை, வேலை என்று அலைய
வேண்டாம். அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும்
பணம் இவைகளை விட இன்னும் மேலானவை வாழ்க்கையில் உள்ளன. இந்த மேலானவைகளைத் தேடி கண்டுபிடிக்க
வேலையை விட்டு வெளியே வா... ஓய்வேடு... இறைவனை, பிறரை, குடும்பத்தை நினைத்துப் பார்க்க
ஒய்வு நாள் தேவை. இதுதான் ஒய்வு நாளைப் பற்றி இறைவன் சொல்லித்தர விரும்பிய முக்கிய பாடம்.
ஆனால், ஒய்வு நாளைச் சொன்ன கடவுளையே மறந்து விட்டு ஒய்வு நாளை வழிபட ஆரம்பித்த பரிசேயர்கள்,
மனிதாபிமானமற்ற வகையில் ஒய்வு நாளை வழிபட ஆரம்பித்தது இயேசுவை அதிகமாய் பாதித்திருக்க
வேண்டும். எனவே தான் அவர், ஒய்வு நாளை மீறினார். அதுவும் தொழுகைக்கூடத்தில் ஒய்வு நாளை
மீறும் வண்ணம், மனிதர்களுக்கு நலம் அளித்தார். நலம் பெற்ற மனிதர்கள், நலம் தரும் புதுமையைப்
பார்த்த மனிதர்கள் கடவுளைப் புகழ்ந்த போது, இயேசு ஒய்வு நாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும்
மக்கள் மனங்களில் அரியணை ஏற்றினார். கடவுளுக்குரியதை கடவுளுக்குத் தந்த திருப்தி இயேசுவுக்கு.