லூக்கா நற்செய்தி அதிகாரம் 17, 20-25 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம்
கேட்டனர். அவர் மறுமொழியாக, ' இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ,
இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது
' என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ' ஒரு காலம் வரும்; அப்போது மானிட
மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.
அவர்கள் உங்களிடம், ' இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! ' என்பார்கள். ஆனால் நீங்கள் போக
வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து
மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.