நவ. 04, 2009. அமேசான் காடுகளை அழிப்பது போன்ற இயற்கைச் சீரழிவுகள் மீண்டும் இவ்வுலகை படைப்புக்கு
முன் இருந்த குழப்ப நிலைக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சியே என்று அமேசான் பகுதியில்
பணி புரியும் இயேசுசபையினரின் தலைவர் அருட்தந்தை ரொபெர்தோ யரமில்லோ (Roberto Jaramillo)
கூறியுள்ளார். இங்கிலாந்தின் வின்ட்ஸர் காஸிலில் (Windsor Castle) நடைபெறும் "பல விண்ணகங்கள்
ஒரு உலகம் கொண்டாட்டம்” என்ற பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் கருத்தரங்கில், ஆதியாகமத்தில்
கூறப்பட்டுள்ள சிங்கார வனம் போன்ற அமேசான் காடுகளை அழிப்பது மனித குலத்தின் கண்மூடித்தனமான சுயநலத்தின்
ஒரு விளைவு என்று அருட்தந்தை யரமில்லோ குறிப்பிட்டுள்ளார். காடுகளை அழிப்பது மட்டுமல்லாது, இப்படி
அழிக்கப்பட்ட நிலங்கள் ஒரு சிலரது தனி உடமையாவதும் அதனால் உண்டாகும் நீதியற்ற ஏற்றத்தாழ்வு நிலைகளும் பல
வன்முறைகளுக்கு மனித குலத்தை இட்டுச் செல்கிறது என்றும் படைப்புக்கு முன் இருந்த குழப்ப
நிலைக்கு மனித இனம் மீண்டும் போகாமல் இருப்பது நம் கையில் உள்ளது என்றும் அருட்தந்தை
யரமில்லோ கூறியுள்ளார்.