அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருட்சகோதரிகளின் சபைகளில் அப்போஸ்தலிக்க மேற்பார்வை
நவ.04,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவிகளின் வாழ்க்கையில் எண்ணற்ற குழப்பமான
நிலைகள் காணப்படுவதால் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அப்போஸ்தலிக்க
கலந்தாய்வு ஒன்றை நடத்த வத்திக்கான் தீர்மானித்ததாக கர்தினால் பிராங் ரோட் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் அருட்சகோதரிகளின் சபைகளுக்கு அப்போஸ்தலிக்க
கண்காணிப்பு மேற்பார்வை நடத்துவதன் நோக்கம் பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய, திருப்பீட
துறவற சபைகளுக்கானப் பேராயத் தலைவர் கர்தினால் ரோட், இந்தச் சந்திப்பு, அந்நாட்டில் இறையழைத்தல்கள்
பெருக உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். 2008ம் ஆண்டில் நடைபெற்ற துறவு வாழ்வு
குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பேச்சாளர்களும் பிரதிநிதிகளும் இந்த விவகாரங்கள்
பற்றி தெளிவுபடுத்தினர் என்றும் கர்தினால் கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடந்து
முடிந்துள்ள முதல் சுற்று அப்போஸ்தலிக்க கலந்தாய்வு, அந்நாட்டில் அருட்கன்னியர்களின்
வாழ்வு பற்றிய தெளிவான விவரங்களைத் திருப்பீடம் அறிந்து கொள்ள உதவியுள்ளது என்றும் அவர்
கூறினார்.தற்போது இரண்டாவது சுற்று அப்போஸ்தலிக்க கலந்தாய்வு இடம் பெற்று வருவதாகவும்
கர்தினால் ரோட் கூறினார்.