ஜிம்பாபுவே அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லுறவுகள் ஏற்படவில்லையெனில் இரத்தம் சிந்தும்
வன்முறை வெடிக்கக் கூடும், கிறிஸ்தவ சபைகள் எச்சரிப்பு
அக்.31,2009 ஜிம்பாபுவே நாட்டில் பிரதமர் மோர்கன் ஸ்வான்ஜிராய், அரசுத்தலைவர் இராபர்ட்
முகாபே மற்றும் அவரின் ZANU-PF கட்சிக்குமிடையே நல்லுறவுகள் ஏற்படவில்லையெனில் இரத்தம்
சிந்தும் வன்முறை வெடிக்கக் கூடும் என்று அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் எச்சரித்துள்ளன.
ஜிம்பாபுவே நாட்டு கத்தோலிக்க, ஆங்லிக்கன், இவாஞ்சலிக்கல் மற்றும் பெந்தகோஸ்து
சபைகள் இணைந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில்
அரசுத்தலைவருக்கும், பிரதமருக்குமிடையே இடம் பெற்ற சந்திப்பு, நாட்டின் பிரச்சனைகளுக்குத்
தெளிவானத் தீர்வைக் கொண்டுவரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் அவ்வறிக்கை, இந்நிலை நாட்டில்
பதட்ட நிலைகள் தொடருவதற்கு வழி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜிம்பாபுவேயில்
2008ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சி ஏற்காததால் கலவரம் வெடித்தது.
பின்னர் 2009ம் ஆண்டில் தேசிய ஐக்கிய அரசு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.