அக். 27, 2009 சர்வதேச சமூகத்தாலும், பல்வேறு அரசியலமைப்புக்களாலும் உறுதிசெய்யப்பட்டுள்ள
மத சுதந்திரம் என்பது, இன்னும் பல நாடுகளில் மீறப்படுவதாக, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில்
கவலையை வெளியிட்டார் பேராயர் செலேஸ்தினோ மிலியோரே. இன்றைய உலகில் எல்லா மதங்களும் பாகுபாட்டு
நிலைகளின் பின் விளைவுகளை அனுபவிக்கின்றன என்ற ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்
பார்வையாளர், மதச் சார்பற்ற தன்மைகள், மத உரிமை மீறல்கள் போன்றவை குறித்த வழக்குகள் இன்று
பெருகிவருவதாகவும் கூறினார். சில ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள்
தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள் என்ற பேராயர் மிலியோரே, பாகிஸ்தானின் தேவநிந்தனை
சட்டத்தைச் சுட்டிக் காட்டி, அது அகற்றப்படுவதற்கான உறுதி மொழிகள் காப்பாற்றப்படவேண்டும்
என்றார்.