2009-10-21 10:38:26

விவிலிய தேடல்: 


வழக்கமாக நாம் பார்க்கும் புதுமை என்ற கண்ணோட்டத்துடன் லூக்கா நற்செய்தி கூறும் கடைசிப் புதுமை: இயேசு பத்து தொழுநோயாளிகளைக் குணமாக்கிய புதுமை.
வேறு எந்த நற்செய்தியிலும் இந்தப் புதுமை எழுதப்படவில்லை. ஐந்தாம் அதிகாரத்தில் இயேசுவின் பணி வாழ்வு ஆரம்பமாவதைக் கூறும் லூக்கா, தொழுநோயாளியை இயேசு குணமாக்கும் நிகழ்வைக் கூறினார். பணி வாழ்வின் இறுதியில், மீண்டும் பத்து தொழுநோயாளிகளைக் குணமாக்கிய புதுமையைக் கூறுகிறார்.
சில வாரங்களுக்கு முன் நமது விவிலியத்தேடலில் இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கியத்தை ஒரு சில கோணங்களில் சிந்தித்தோம். இன்று இந்தப் புதுமையை இன்னும் சில கோணங்களிலிருந்து பார்ப்போம். இயேசுவின் ஒவ்வொரு புதுமையும் கடல் போன்றது. ஒவ்வொரு முறை மூழ்கும் போதும் ஒரு சில முத்துக்களை எடுத்து வரலாம். கடலில் மூழ்குவோமா? நற்செய்தியைக் கேட்போம்.லூக்கா நற்செய்தி, 17:11-19 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார். பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.
இன்றைய விவிலியத்தேடலில், தொழுநோய் அந்த பத்து நோயாளிகளிடம் ஏற்படுத்திய மாற்றத்தை முதலில் சிந்திப்போம். இயேசு கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்கள், சமாரியர் வாழ்ந்தப் பகுதிகள் அவை. நமது கலாச்சாரப் பின்னணியைக் கொண்டு இதைப் பார்க்க வேண்டுமானால், இப்படி பார்க்கலாம். அக்ரகாரத்தின் வழியாகவும், சேரியின் வழியாகவும் இயேசு நடந்தார். யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று செர்க்கமாட்டோமா என்று இயேசு கட்டாயம் சிந்தித்திருப்பார், ஏங்கியிருப்பார்.
அந்த நேரம், பத்து தொழுநோயாளிகள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளிகள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமூகமும், சமாரிய சமூகமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு அவர்களை இணைத்தது. இதையே ஒரு புதுமையாக பார்க்கலாம்.
நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், 1977 ஆம் ஆண்டு. இன்னும் நினைவிருக்கிறது. நான் திருச்சி தூய வளனார் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த போது, பெரு வெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. கல்லூரியும் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவைகளில் சேரிகளும் உண்டு, அக்ரகாரங்களும் உண்டு.
பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரி கட்டடத்தின் 2வது 3வது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, கொஞ்சம் வசதி உள்ளவர் என்று எல்லாரும் சேர்ந்து தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டு சுவர்கள் வெள்ளத்தில் இடிந்த போது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச் சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள் மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப் பட்டுவிட்டன என்று நினைக்கிறேன்.
2001ஆம் ஆண்டு செப். 11 விமானங்கள் இரண்டு மோதியதால், நியூயார்க்கில், இரு பெரும் வர்த்தகத் கோட்டைகள் இடிந்து விழுந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த அழிவு அனைவரையும் சமமாக்கியது. இதைப் பற்றி ஒருவர் மின்னஞ்சலில் எழுதும் போது சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the burning building,
We became one class.
இடிந்து விழுந்தது கோபுரங்கள், நிமிர்ந்து நின்றது மனித குலம். அந்த இடிபாடுகள் எழுப்பிய, புகையும், புழுதி மண்டலமும் சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாகியது. புழுதி, புகை நிறம். வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் போயின. பல நூறு ஆண்டுகள் அந்த மக்கள் கண்டு வரும் சமத்துவம் என்ற கனவு அந்த நேரத்தில், நனவாகியது.
ஆனால், பாவம், அந்த அழிவிலிருந்து மீண்டதும், பழைய பாகுபாடுகள் மீண்டும் கட்டியெழுப்பப் பட்டிருக்கும்.
அந்த அழிவு அவர்களுக்கு ஒரு சில பாடங்களை ஆழமாகச் சொல்லித் தந்ததால், இன்று கருப்பினத்தைச் சார்ந்த ஒருவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்து, வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளனர். கருப்பினத்தைச் சார்ந்த ஒருவர் வெள்ளை மாளிகையில்? கருப்பு வெள்ளை என்ற பாகுபாடுகள் குறைய ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு நல்லது. உலகத்திற்கும் நல்லது.

தொழுநோய் என்ற துன்பம் இந்த பத்து நோயாளிகளை பாகுபாடுகளை மறந்து சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும்? என்ன நடந்திருக்கும்  என்பதை இப்படி நினைத்துப் பார்க்கிறேன்.
"அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று." என்று நற்செய்தி கூறுகிறது. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர் உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கொண்டே யேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்.
"மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். நன்றி பெறவேண்டும் என்பதை விட, அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். அந்த ஒற்றுமை எங்கே போனது?
போகும் வழியில் அவர்கள் நோய் நீங்கிற்று.
நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும் சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்த சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்." என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்க்கின்றனர்.
குருக்களிடம் தாங்கள் போகும் போது, இந்த சமாரியனுக்கு அங்கே என்ன வேலை? இந்த சமாரியனோடு அவர்கள் குருக்களிடம் போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கி வைத்த தொழு நோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே.
அவர்கள் இப்படி வேற்றுமை காட்டும் எண்ணங்களில் இருந்ததை அவர்களின் உஷ்ணப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்க வேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்கு ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளை இட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம். அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது.
தன்னை குணமாக்கியவரே ஒரு பேரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம். இந்தத் தெளிவோடு அந்த சமாரியர் யேசுவிடம் திரும்ப வருகிறார்.
திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, ஏசுவுக்கு ஒரு புறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக் கடன் செலுத்த வந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப் பட்டது, ஒதுக்கப் பட்டது குறித்து ஏசுவுக்கு வேதனை. "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று மனம் விட்டு, வாய் விட்டு கேட்டே விடுகிறார். அவர் கேள்விக்கு பதில் இல்லை.
பயனற்ற, பாகுபாடுகளால், வேறுபாடுகளால் பிளவுபட்டிருக்கும் தன் சமுதாயத்தைச் எப்படி குனபடுத்துவது என்ற இயேசுவின் தேடல் இன்னும் முடியவில்லை. அது கல்வாரியில் தான் முடியுமோ?
லூக்காவும் இப்படி நினைத்து தான் இந்தப் புதுமையை இயேசுவின் இறுதிப் புதுமையாக அவர் நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.
விவிலியத் தேடலை முடிக்கு முன்பு, நன்றியைப் பற்றி கூற வேண்டும். நன்றியைப் பற்றி வேறு ஒரு தருணத்தில் இன்னும் ஆழமாகப் பார்க்கலாம். ஆனாலும், நன்றியைப் பற்றி, நன்றியுள்ள மனங்களைப் பற்றி சிறிதாவது பேசவில்லை என்றால், நமது தேடல் முழுமை பெறாது.
உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கு.
நம்முடைய சொந்த வாழ்வையும் ஆராய்ந்து பார்த்தால், அங்கும் இதே கணக்கு தான். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து சொல்கிறேன்.. நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்து வரும். இந்தநாள், நாம் நன்றி சொல்லும் நேரங்களை விட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரம் தாம் அதிகம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அருங்கொடை இயக்கங்கள் ஆரம்பமாயின. நானும் அந்த இயக்கத்தில் அதிகம் ஈடுபட்டவன்.
அந்த இயக்கத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட ஒரு அழகிய பாடம் இது: அதுவரை, "இறைவா, என் பாவங்களை மன்னியும்." என்ற மன்றாட்டோ அல்லது "இறைவா, எனக்கு இதைத் தாரும்." என்ற விண்ணப்பமோ என் செபங்களில் அதிகம் இருந்தது. "இறைவா உமக்கு நன்றி." என்று கூறிய செபங்கள் மிக, மிக குறைவு. இல்லை என்றே சொல்லலாம். செபம் என்றால், மன்றாட்டு, விண்ணப்பம் என்று நினைத்து வந்த என்னை, செப நேரங்களை நன்றியிலும் முழுமையாகச் செலவிடலாம் என்று சொல்லித்தந்தது அந்த அருங்கொடை இயக்கங்கள்.
நன்றி கூறும் செபங்களால், மன நிறைவு கிடைத்ததை பல முறை உணர்ந்திருக்கிறேன். இறைவனுக்கும், பிறருக்கும் நன்றி சொல்லும் பொது, அதுவும் உதட்டளவில் இல்லாமல்,  உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்போது, இது போன்ற நிறைவை நீங்களும் கட்டாயம் உணர்ந்திருப்பீர்கள், இல்லையா?
இரு அழகான எண்ணங்களுடன் இந்தத் தேடலை நிறைவு செய்வோம்.
 "The most important prayer in the world is just two words long: Thank you" Meister Eckhart
உலகத்திலேயே மிக முக்கியமான, அவசியமான ஜெபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும். தேங்க் யு. தமிழில் யோசித்துப் பார்த்தால், ஒரே வார்த்தைதான்: நன்றி.
இன்னொமொரு அழகான கூற்று:
"God has two homes - one in heaven and the other is a thankful heart"
கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று நன்றி நிறைந்த உள்ளம்."கடவுள் விரும்பித்தங்கும் இல்லமாக உங்கள் உள்ளம் இருக்கவேண்டும் என்பது என் செபம். இன்று இரவு படுக்கப் போகும் பொது, இந்த இரு எண்ணங்களுடன் தூங்கச் செல்லுங்கள். இதுவரை இந்த விவிலியத் தேடலைப் பொறுமையாக கேட்டதற்கு நன்றி. நன்றி...







All the contents on this site are copyrighted ©.