ஆப்ரிக்காவில் திருச்சபையின் இருப்பு இன்றியமையாதது, ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவையில்
ஓர் அருட்சகோதரி வலியுறுத்தல்
அக்.10,2009 ஆப்ரிக்காவில் குணப்படுத்தல், விடுதலை மற்றும் ஒப்புரவைக் கொண்டு வருவதற்கு
அங்கு திருச்சபையின் இருப்பு இன்றியமையாதது என்று, ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவையில்
அருட்சகோதரி ஜெனீவ் உவாமரியா கூறினார்.
வத்திக்கானில் நடைபெற்று வரும் ஆப்ரிக்காவுக்கான
இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையில் உரையாற்றிய இச்சகோதரி, தனது தந்தையையும் மற்றவர்களையும்
கொலை செய்த கைதிகளைச் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
தவறு செய்தவர்களை
மன்னிக்கும் போது கிடைக்கும் அகஅமைதி பற்றியும் பேசிய அவர், ஒப்புரவு, மோதல்களில் ஈடுபட்ட
குழுக்களை ஒன்றிணைப்பது மட்டுமன்றி, ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும் உள்அமைதி பெறவும்
வழி செய்கின்றது என்று கூறினார்.
அருட்சகோதரி உவாமரியா, ருவாண்டாவில் 1994ம்
ஆண்டு இடம் பெற்ற இனப்படுகொலைகளின் போது தனது தந்தையையும் பல உறவினர்களையும் இழந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இனப்படுகொலையானது 20ம் நூற்றாண்டில் இரத்தம் சிந்துதலை
மிக அதிகமாக ஏற்படுத்திய கடும் மோதல்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது.