இறைப் பணியாளர் கொல்லப்பட்டதன் தொடர்பாக 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
செப். 26, 2009 ஒரிஸ்ஸாவில் சென்ற ஆண்டு அக்பர் டிகால் (Akbar Digal) என்ற கிறிஸ்தவ (Baptist )
இறைப் பணியாளர் கொல்லப்பட்டதன் தொடர்பாக கைது செய்யப்பட 5 குற்றவாளிகளை விசாரணை செய்து,
ஆயுள் தண்டனை விதிப்பதில் இந்திய நீதி மன்றங்கள் விரைவாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டது
இந்திய நீதி முறையின் மேல் நம்பிக்கையை வளர்த்துள்ளது என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின்
பிரதிநிதி அருட்தந்தை பாபு ஜோசப் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீதி மன்றங்களின்
இந்த நடவடிக்கை நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பினும், கந்தமாலில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட
வன்முறைகளில் கைது செய்யப்பட்டவர்கள் மீது இன்னும் நீதி விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பது
கவலையைத் தருகிறது என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், வருங்காலத்தில்
வன்முறையாளர்கள் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடுவதற்குத் தயங்குவார்கள் என்றும் அருட்தந்தை
ஜோசப் கூறினார். ஒரிஸ்ஸாவில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் உழைத்து
வரும் மதர் தெரசாவின் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி சுமாவும், அப்பகுதிகளில் பணியாற்றும்
வட இந்திய திருச்சபையின் செயலர் Reverend Enos Pradhan ம், இந்த தீர்ப்புகள் நீதியானவை
என்றும், இவை காலம் தாழ்த்தி வந்தாலும் மனதுக்கு நிம்மதியைத் தருகின்றன என்றும் குறிப்பிட்டனர்.