2009-09-19 18:13:23

ஞாயிறு சிந்தனை


இந்த வார நற்செய்தியில் வரும் ஒரு வசனத்தை மையமாக வைத்து நம் ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம்.

“பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் கன்னியர்கள் நடத்தும் ஒரு பள்ளியில் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம். நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்... என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற சைகைகள்.  பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடிய போது, எல்லா குழந்தைகளும் வலது கட்டைவிரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது கையால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த சிஸ்டரிடம் அதைச் சுட்டிக் காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.

LKG குழந்தைகளுக்கு சைகைகளுடன் பாடல்களைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்ய வேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்ய வேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை சரியான சைகைகளைக் கற்றுக் கொள்ளும்.

 அன்பர்களே, யோசித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள் குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார் ஒரு வீட்டுத் தலைவி. அவரோடு, நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகளும் உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும் போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். மகள் கட்டாயம் இதைக் கவனித்திருப்பாள். விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால் செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே." என்றாள் மகள். "அம்மா எப்படி செபம் சொல்வாங்களோ அப்படி சொல்லும்மா." என்றார். உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து என் சந்தோஷத்தைக் கெடுக்கணும்னு தெரியலியே." என்று வேண்டிக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது செய்வது எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு சம்பவம். ஒரு வீட்டுத் தலைவி வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அருகில் TV ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அரு பிரபலமான நடிகை கவர்ச்சிகரமாக ஆடிக் கொண்டிருக்கிறாள். தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இப்படி ஆடுவா." என்று கூறுகிறாள். அந்நேரம், அங்கு வருகிறாள் அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ரைம் சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ரைமைச் சைகையோடு செய்து காட்டுகிறாள். அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த டான்ஸ் ஆடும்மா." என்று சொல்லி ஒரு சினிமா பாடலைச் சொல்கிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ரைம் சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால் மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "ரைம் எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறாள். குழந்தைகளை அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில் நம் உலகத்திற்கு பலவந்தமாக இழுத்து வரும் முயற்சி இது.

அன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சிகளில், முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும் தொலைக்காட்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ வந்து, அவர்கள் வயதுக்கு மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் சிரிப்புகள் அவர்களுக்கு புரியுமோ என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் ரசிகர்கள் சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைகாட்சியில் தோன்ற வேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி, அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அங்கே சொல்ல வைப்பார்களோ? பாவம். இதெல்லாம் குழந்தைகளைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள்.

இயேசு குழந்தையை ஏன் சீடர்கள் மத்தியில் வைத்தார்? பின்னணியைப் பாப்போம்.

சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? சீடர்கள் மத்தியில் இது ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.

இயேசு, தன் கேள்விகளுக்கு விடையளித்த, அதுவும் "மெசியா" என்று ஆழமான விடையளித்த பேதுருவைப் புகழ்ந்தார். அந்த பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம்,  சிலுவை இவை பற்றி பேசினார்.

இயேசுவின் இந்த பேச்சு, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார்.

தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்து கொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாக பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு விளங்கவில்லை என்று மாற்கு நற்செய்தி இன்று கூறுகிறது.

இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம்.

இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.

பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

அதற்கு இயேசுவின் பதில், ' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'

இந்த கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்த சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஒரு அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, சம்மனசுக்கான இறக்கைகள் மறைந்து விடுகின்றன.

அன்பர்களே, குழந்தைகளைப் பற்றி பேசும் போது, நமது நாட்டில் அன்றாடம் வருந்தி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம். இதைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக சிந்திப்போம். இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்கு தரும் பாடங்கள் இவைகள்தாம்:
குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம். அவர்களை நம்மைப் போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.







All the contents on this site are copyrighted ©.