அன்பர்களே, சென்ற வாரம் விவிலியத்தேடலில் இயேசு தொழுநோயாளி ஒருவரைக் குணமாக்கிய புதுமையைப்
பற்றி சிந்தித்தோம். இந்த வாரம் முடக்கு வாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையைப்
பற்றி சிந்திப்போம். சென்ற வாரமே இந்தப் புதுமையைப் பற்றி கொஞ்சம் பேசினோம். இந்த வாரம்
இன்னும் ஆழமாய் சிந்திக்கலாம்.
பொதுவாகவே, இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை
வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப்
புதுமைகைளை ஆற்றிய போது இருந்த சூழ்நிலை, அந்தப் புதுமையில் பங்கு பெற்றவர்கள் ஆகியவைப் பற்றியும்
சிந்திப்பது பயனளிக்கும். இந்த கண்ணோட்டத்துடன், இன்று நாம் சிந்திக்கவிருக்கும் புதுமையை
லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.
லூக்கா, 5, 17-26.
17
ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும்
எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.
பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.18 அப்பொழுது
சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய்
இயேசுமுன் வைக்க வழி தேடினர்.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே
கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய்
மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.20 அவர்களுடைய
நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.21
இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், ' கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள்
மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என்று எண்ணிக்கொண்டனர்.22
அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, ' உங்கள் உள்ளங்களில் நீங்கள்
எண்ணுகிறதென்ன?23 ' உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன ' என்பதா, அல்லது
' எழுந்து நடக்கவும் ' என்பதா, எது எளிது?24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க
மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே
அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய
கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்! ' என்றார்.25 உடனே அவர்
அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப்
புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.26 இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், ' இன்று புதுமையானவற்றைக்
கண்டோம்! ' என்று பேசிக் கொண்டார்கள்.
முதல் வசனத்தைத் திரும்பவும் கேட்போம்.
"ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும்
எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்."
லூக்கா நற்செய்தியின்படி இயேசுவின் வல்லமை ஒரு சில புதுமைகளின் வழியே, அதிலும்
சிறப்பாக, குணமாக்கும் புதுமைகளின் வழியே பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. இதைக் கேள்விப்பட்டு,
பலர் யேசுவிடம் என்னதான் நடக்கிறதென்ற ஆர்வத்தில் அவரைக் காண வந்தனர். ஏராளமான எளிய மக்கள்
இது போல ஏதாவது தங்கள் வாழ்விலும் நடக்கும் என்ற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு இயேசுவைத்
தேடி வந்தார்கள். இவர்களெல்லாம் வந்தது சரிதான். ஆனால், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள்?
இவர்களுக்கு அங்கே என்ன வேலை? அதுவும் யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும்,
எருசலேமிலிருந்தும் வந்திருந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார்.
அன்பர்களே, மதுரை
அல்லது திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஒரு சின்ன ஊரில் இருக்கும் ஒரு தனி மனிதரிடம் அசாத்திய
திறமைகள், சக்திகள் வெளிப்படுவதாகவும் அவர் வழியாக ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதாகவும்,
அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன என்று
வைத்துகொள்வோம். விரைவில் அந்த ஊருக்கு சென்னையிலிருந்து அல்லது டெல்லியிலிருந்து அரசு
அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? சம்பவங்களில்
பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அந்த சம்பவத்தைப் பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்ல
வேண்டும்... அல்லது அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும்
காரியங்கள் சட்டபூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்... இவையே இவர்களின்
முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை பொம்மைகள் இவர்கள்.
இயேசுவைச் தேடி வந்தவர்களிடமும்
பல்வேறு நோக்கங்கள். இயேசு ஆற்றும் அருங்குறிகளைக் காண வேண்டும், அவரிடமிருந்து அற்புதங்களைப்
பெற வேண்டுமென எளிய மக்கள் வந்திருந்தனர். இயேசுவிடம் குற்றங்களைக் காண வேண்டும், அவருக்குக்
குற்றப் பத்திரிகைத் தரவேண்டுமென பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் வந்திருந்தனர்.
இந்த நேரத்தில் இன்னும் நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப் போனால்,
இவர்கள்தாம் இன்றைய நிகழ்வின் நாயகர்கள்.
இந்த நான்கு நண்பர்களும் வெறும் ஆர்வக்
கோளாறினால் அங்கு வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தார்கள். பல ஆண்டுகளாய் செயல் இழந்து படுக்கையில்
இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் நண்பனின்
இந்த அவலமான நிலையைக் கண்டு இதுதான் அவனுக்கு வந்த விதி என்று அவன் வாழ்வையும் தங்கள்
நம்பிக்கையையும் மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வழியில் நல்லது
நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள் இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டார்கள்.
தங்கள் நண்பனைக் கொண்டு வந்தார்கள்.
வந்த இடத்தில் மீண்டும் ஒரு தடங்கல். இயேசு
இருந்த வீட்டில் அதிக கும்பல். அந்த கும்பலில் வெளிச் சுற்றில் நின்றவர்கள் குருக்கள்,
பரிசேயர்... அவர்களைக் கடந்து தங்கள் நண்பனைக் கட்டிலோடு வீட்டினுள் இருந்த யேசுவிடம்
கொண்டு போவதென்பது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி கடவுள் சாபம் பெற்றவன் அவனை தொட்டாலோ,
அல்லது அவன் தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டு பெறுவோம் என்பதால், நோயாளி கூட்டத்திற்குள்
வந்துவிட்டான் என்று கண்டுபிடித்தால் அவனுக்கு உரிய தண்டனை வழங்குவதிலேயே குறியாய் இருக்கும்
கும்பல் இந்த குருக்கள், பரிசேயர் கும்பல். இந்த கொடூரமான எண்ணங்களை இவர்கள் அடிக்கடி
சொல்லியுள்ளதையும், அவற்றைச் செயல் படுத்தியத்தையும் பார்த்தவர்கள் இந்த நண்பர்கள். தங்கள்
நண்பனை இவர்களின் சித்திரவதைக்கு ஆளாக்காமல் யேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று
கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது அந்த ஒளி, ஒரு புது பாதை தெரிந்தது. இயேசு
நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள்.
இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.
கட்டிலை வீட்டின் கூரை மீது
ஏற்றி, ஓடுகளைப் பிரித்து.... அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல். இயேசு போதித்துக்கொண்டிருந்த
வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால்,
கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்...
கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து
நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன்.
தலைக்கு மேலே
வெள்ளம் போன பிறகு சாண் என்ன, முழம் என்ன என்ற வரிகள் நினைவிருக்கலாம். நம்பிக்கை இழக்கச்
செய்யும் இந்த வரிகளை இன்னும் தொடர்ந்து சிந்திப்போம்... தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளத்தில்
தத்தளிக்கும்போது, கரை தெரிந்தால், எஞ்சிஇருக்கும் வலிமை எல்லாம் கூட்டி கரையை அடைய
மாட்டோமா? அப்படித்தான் இந்த நண்பர்களும்.... பல ஆண்டுகளாய் பற்பல வெள்ளங்களைச் சந்தித்தவர்கள்
இவர்கள். இதோ கரை நெருங்கிவிட்டது. கூரை நெருங்கி விட்டது என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில்
பின் வாங்கக் கூடாது. எப்படியாவது இயேசுவுக்கு முன்னால் தங்கள் நண்பனைக் கொண்டு செல்லவேண்டும்.
கொண்டு சென்றார்கள்.
லூக்கா நற்செய்தியின் 20 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள
வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்க தூண்டுபவை. "அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு..."
ஆம்... கட்டிலில் கிடந்தவன் நம்பிக்கையை விட அவனைத் தூக்கிவந்தவர்கள் நம்பிக்கை இயேசுவை
அதிகம் கவர்ந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவனை இயேசு குணமாக்குகிறார்.
இயேசுவின் பல குணமளிக்கும் நிகழ்வுகளில் குணமிழந்த தனி மனிதனுக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி
நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார் இயேசு. தொழு நோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று
சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார்.
இன்று மீண்டும் இயேசு அதையே செய்கிறார்.
அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து,
"குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன." என்று கூறுகிறார். பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக்
கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.
ஆழமாக சிந்தித்தால்,
பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாக, பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட
முயற்சி இது என்பதை உணர்வோம்.. இயேசு முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் குணமாக்க விரும்பவில்லை.
அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த
சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு
முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறினார்.
இயேசு
அவருடைய பாவத்தை மட்டுமல்ல சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக முடக்குவாதமுற்றவருக்கு இதுவரை
தவறான தீர்ப்புகள் அளித்து அவரையும் தங்களையும் கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர்,
மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார்.
மன்னிப்பு ஒரு ஆறாக அங்கு
பெருகி ஓடிய போது, அழகிய ஒரு சம்பவம் நிகழ்கிறது. பல வருடங்களாய் கட்டிலோடு முடங்கிப்போனவர்
தட்டுத் தடுமாறி எழுகிறார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம்
முழுவதும் பரவி, தன்னை இதுவரைத் தாங்கி வந்த கட்டிலை அவர் தூக்கிக் கொண்டு வெளியே செல்கிறார்.
அவர் உள்ளே வருவதற்கு இடம் தராத அந்த கும்பல், முக்கியமாக அவரை இயேசுவிடம் சேர்க்க முடியாமல்
வழி மறைத்து நின்ற குருக்கள், பரிசேயர் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழி விட, அவர்
கம்பீரமாய் வெளியே செல்கிறார். வீட்டின் கூரை மீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள்
இயேசுவுக்கு அங்கிருந்தபடியே நன்றி சொல்லிவிட்டு அவசரமாய் இறங்கி வந்து நண்பனுடன் மகிழ்வாக
செல்கின்றனர். வரும்போது அவரைச் சுமந்து வந்த கட்டிலை எல்லாரும் சேர்ந்து குப்பையில்
எறிந்து விட்டு போயிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் நாம் சுமக்கும், பிறர் மீது நாம் சுமத்தும்
சுமைகளைப் பற்றி சிந்திக்கலாம்.
ஒரு சிறுமி தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச்
சென்ற போது, அங்கிருந்த ஒரு டாக்டர் சிறுமியிடம் "அவன் பராமாயில்லையா?" என்று கேட்டபோது,
அந்த சிறுமி, "பாரமில்லை, அவன் என் தம்பி." என்று சொன்னதாக ஒரு சின்னக் கதை உண்டு. சுகமான
சுமைகள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. தாயின் கருவில் வளரும் குழந்தையை வழக்கமாகத்
தாய் சுமையாக நினைப்பதில்லை. ஆனால், மற்ற சுமைகள்? இதோ இன்னொரு கதை.
ஒரு வயதான
தொழிலாளி சாலையில் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு போகிறார். அந்த வழியே வந்த ஒரு லாரி
ஓட்டுனர் லாரியை நிறுத்தி, அந்த தொழிலாளியைத் தனது லாரியின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னாராம்.
தொழிலாளி ஏறியதும், லாரியை ஓட்டிச் சென்றாராம். சிறிது தூரம் போனதும், தொழிலாளி எப்படி
இருக்கிறார் என்று பார்ப்பதற்கு திரும்பியபோது, ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். காரணம்?
அந்த தொழிலாளி இன்னும் தன் தலையில் அந்த சுமையை வைத்துக்கொண்டு லாரியில் நின்றதைப் பார்த்தார்.
லாரியை நிறுத்திவிட்டு அவரிடம், "ஐயா, அந்த சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே." என்று
சொன்னதற்கு, அந்த தொழிலாளி, "வேண்டாம் ஐயா. நீ எனக்கு இடம் கொடுத்ததே பெரிது... இதையும்
ஏன் உன் லாரி சுமக்கணும்? நானே சுமந்துக்கிறேன்." என்று சொன்னாராம். சுமைகளைச் சுமப்பதும்,
சுமைகளைப் பிறர் மீது சுமத்துவதும் நமக்குக் கைவந்த கலைகள். சுமைகள் தீர இயேசுவை நாடி
வருவோம். சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.