ஆசியாவில் வறுமையை ஒழிப்பதில் கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு
அதிகரிக்க வேண்டும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் அலுவலகர்
செப்.14,2009 ஆசியாவில் வறுமையை ஒழிப்பதில் கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான
ஒத்துழைப்பு இன்னும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல்
அவையின் அலுவலகர் ஒருவர் கூறினார்.
வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் இவ்விரு
சமூகங்களுக்கிடையில் மேலும் அதிக முயற்சிகள் தேவை என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின்
ஆசியாவில் முஸ்லீம்களுடனான உறவுகள் பிரிவின் அருள்திரு மார்க்குஸ் சோலோ கூறினார்.
திருப்பீட
பல்சமய உரையாடல் அவை வெளியிட்டுள்ள ரமதான் செய்தியையொட்டி யூக்கா செய்தி நிறுவனத்திற்குப்
பேட்டியளித்த அக்குரு, ஒரு மதத்தவர் பிறரன்பு நடவடிக்கைகளைச் செய்யும் போது அது மதமாற்றத்திற்கு
வழிவகுக்கின்றது என்று இன்னொரு மதத்தவர் முற்சார்பு எண்ணம் கொண்டிருப்பது தவிர்க்கப்பட
வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ஆசியா, உலகின் பெரும்பான்மை முஸ்லீம்களும் சிறுபான்மை
கிறிஸ்தவரும் வாழும் பகுதியாக இருந்தாலும் பல்வேறு துறைகளில் இவ்விரு மதத்தவரும் ஒன்றிணைந்து
உழைக்க முடியும் என்ற தனது நம்பிக்கையையும் வத்திக்கான் அதிகாரி அருள்திரு சோலோ வெளியிட்டார்.