2009-09-05 17:03:05

திருச்சபையின் முக்கிய பணி எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிப்பதாகும், திருத்தந்தை


செப்.05,2009 திருச்சபையின் முக்கிய பணி எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிப்பதாகும், அதுவும் சிறப்பாக, வேகமாக மாற்றங்கள் இடம் பெற்று வரும் இன்றைய சமுதாயத்திற்குத் திருச்சபையின் நற்செய்திப்பணி உடனடி தேவையாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.

வருகிற அக்டோபர் 18ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபோதக தினத்திற்கென, “மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்” என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையில், மனித சமுதாயம் முழுவதும் தனது ஊற்றாகிய இறைவனிடம் திரும்புவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றுரைக்கும் அவரின் செய்தி, இக்காலத்திய முரண்பாடுகள், துன்பங்கள் இவற்றுக்கு மத்தியிலும், புதிய படைப்பின் எதிர்காலம் ஏற்கனவே உலகில் சுடர்விடுகின்றது, இது புதிய வாழ்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்றும் கூறுகிறது.

இறையாட்சிக்கான பணியின் போது, சமூகப்பாகுபாடுகள், சிறைவாசம், சித்ரவதை, மரணம் போன்ற பலவகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கிய இருபால் மறைபோதகர்களை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இன்றும், இயேசுவின் பெயரை முன்னிட்டு பலர் மரணத்தை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மறைபோதகத் தளங்களுக்கு நிதியுதவியும் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, மறைப்பணியில் ஈடுபட்டுள்ள மறைபோதகர்களுக்காவும், வெறுப்பு அடக்குமுறை ஆகியவற்றுக்கு மத்தியிலும் நற்செய்திக்குச் சாட்சியம் பகரும் கிறிஸ்தவ சமூகங்களுக்காகவும் செபிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.