தென் சூடானில் இடம் பெற்று வரும் வன்முறை எப்பிஸ்கோப்பல் பேராயர் எச்சரிக்கை
செப்.02,2009 சூடானின் தென் பகுதியில் இடம் பெற்று வரும் வன்முறை, அந்நாட்டின் 21 வருட
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமைதி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது
என்று அந்நாட்டு எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ சபை பேராயர் டானியேல் டெங் புல்யாக் கூறினார்.
கால்நடைகள்
சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து அண்மையில் இடம் பெற்ற பூர்வீக இனத்தவருக்கிடையேயான மோதல்கள்
உண்மையிலேயே பதட்டநிலைகளை உருவாக்கியிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்த பேராயர் டானியேல்,
இத்தகைய மோதல்களில் இவ்வாண்டில் மட்டும் சுமார் 2000 பேர் இறந்துள்ளனர் என்றார்.
இந்த
மோதல்களைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் சூடானின் 2005ம்
ஆண்டின் அமைதி ஒப்பந்தம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் என்று அவர் எச்சரித்தார்.
சூடானில்
2010ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசிய பொதுத் தேர்தல்களை தற்போதைய வன்முறை பாதிக்கக்கூடும்
என்ற அச்சத்தையும் பேராயர் வெளிப்படுத்தினார்.