2009-08-25 15:08:59

அக்டோபர் 4 வெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான செபநாள்


ஆக.25,2009. உலகின் வெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் வருகிற அக்டோபர் 4ம் தேதியன்று அதற்கான செபநாளைக் கடைபிடிப்பதற்கு பிரிட்டன் அனைத்து கிறிஸ்தவச் சபைகளின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக வெப்பநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டை இவ்வாண்டு இறுதியில் நடத்தவுள்ளதை முன்னிட்டு அதன் முயற்சிகளுக்கு செபம் மூலம் ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர் பிரிட்டன் கிறிஸ்தவத் தலைவர்கள்.

வருகிற டிசம்பரில் கோப்பன்ஹாகனில் நடைபெறவுள்ள இம்மாநாடு நல்லதொரு தீர்மானித்தை எடுப்பதற்கு வாழ்வின் நாயகனும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையுமானவரிடம் உருக்கமாகச் செபிக்கவிருப்பதாக இலண்டன் ஆங்கிலிக்கன் ஆயர் ரிச்சர்டு சார்ட்ரெஸ் கூறினார்.

நாம் செய்யும் அழிவுச் செயல்கள், கடவுளைப் புகழும் படைப்பின் பாடலை மௌனப்படுத்தும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டன் கத்தோலிக்க ஆயர்கள், படைப்பைப் பாதுகாப்பதற்கு நாம் எடுக்கும் செயல்கள் கடவுளை உண்மையாகவே புகழ்வதன் வெளிப்பாடாக அமையும் என்று கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து திருச்சபைகள் இணைந்து இந்த செப நாளை அறிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.