2009-08-18 17:31:07

விவிலியத் தேடல் நிகழ்ச்சி – இயேசு செய்த புதுமைகள் .180809 .


இறந்த லாசரைக் கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்பியது

யோவான் (அருளப்பர்) நற்செய்தி அதிகாரம் 11 , 1-45 .



1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள்.4 அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ' என்றார்.5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.7 பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் ' என்று கூறினார்.8 அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள்.9 இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை' என்றார். 11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் ' என்றார்.12 அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர்.13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் ' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார்.16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார்.17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.21 மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார்.23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் ' என்றார்.24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார்.25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார்.27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார்.28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார்.29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார்.33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள்.35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள்.37 ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர்.38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.39 ' கல்லை அகற்றி விடுங்கள் ' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார்.40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? ' என்று கேட்டார்.41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் ' என்று கூறினார்.43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா ' என்று கூப்பிட்டார்.44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் ' என்று இயேசு அவர்களிடம் கூறினார்.45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.



நேயர்களே இயேசு செய்த அருஞ்செயல்களில் மிகவும் உச்சக்கட்டப் புதுமையை நாம் இன்று காண்கிறோம் . இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து ஆற்றிய அரும்பெரும் சாதனையை நாம் இன்று காண்கிறோம். இயேசுவை வாழ்வு தரும் நீருற்றாக , உலகின் ஒளியாக , நல்ல ஆயனாக நாம் கண்டிருக்கிறோம் . இன்று நாம் அவரை வாழ்வும் உயிர்ப்புமாகக் காண்கிறோம் .

மார்த்தாள், அவர் சகோதரி மரியாள் , அவர்கள் சகோதரர் லாசர் ஆகியோரைக் கொண்ட குடும்பத்தோடு இயேசுவு நட்புடன் இருந்தததாக நாம் எண்ணலாம். இரண்டு சகோதரிகளும் அவர்கள் சகோதரர் லாசர் நலம் குன்றியிருந்ததாக இயேசுவுக்குச் சொல்லி அனுப்பியிருந்தார்கள் . லாசரின் உடல் நலக்குறைவு கடவுளின் மகிமைக்காகவே என இயேசு கூறுகிறார். இந்த உடல் நலக்குறைவு சாவில் முடியக்கூடியதில்லை என இயேசு தெரிவித்தார் . மனுமகனாகிய இயேசுவின் மகிமைக்காகவும் லாசர் நோயுற்றிருப்பதாகத் தெரிவித்தார் இயேசு . ஆனால் இயேசுவின் உண்மையான மகிமை அவர் சிலுவையில் ஏற்றப்படும்போதுதான் தெரியவரும் . இயேசுவும் சாவை வென்று உயிரோடு எழுப்பப்படுவார்.



இந்த நற்சய்திவாசகத்தில் வரிக்கு வரி விளக்கம் கொடுக்கவேண்டிய அளவுக்கு ஒவ்வொரு வரியும் அர்த்தங்கள் பொதிந்துள்ளவை . நாம் முக்கியமான பகுதியாகிய லாசரை உயிரோடு எழுப்பும் பகுதிக்கு மட்டும் விளக்கம் காண்போம்.

இறந்த லாசரை மூடியிருந்த கல்லறைக் கல்லை நீக்கிவிடுங்கள் என இயேசு கூறுகிறார் . இயேசுவே கல்லை நீக்கியிருக்கக் கூடாதா ? எனக் கேள்வியை எழுப்பலாம் . நாமே செய்யக்கூடியவற்றை நாமேதான் செய்யவேண்டும் . அதற்கெல்லாம் கடவுள் புதுமை செய்யவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. நாம் செபிக்கக் கற்றுக்கொண்டால் புதுமைகளையும் செய்யலாம் . ஆனால் செபிப்பது எல்லோருக்கும் எளிதானதல்ல . நாம் ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்வது போல செபிப்பதற்கும் கற்றுக் கொள்ளவேண்டும் . ஆரம்பத்தில் செபிப்பது கடினாமாக இருக்கலாம் . ஆனால் போகப்போக சுகமாக இருக்கும் . புனித அவிலா தெரசாள் போன்ற புனிதர்கள் செபிக்கக் கற்றுக்கொள்ள பல காலம் எடுத்துக்கொண்டார்கள்.

அடுத்து மார்த்தாள் தாங்கமுடியாத நாற்றம் அடிக்கும் எனப் பயப்படுகிறாள் . லாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஒருவேளை இயேசு இதை மறந்திருக்கலாம் . ஆனால் இயேசு என்ன பதில் கொடுத்தார். நீ நம்பினால் கடவுளின் மகிமையைக் காண்பாய் என்றார். நம் வாழ்க்கையிலும் நாம் சில சமயம் கடவுளை முழுவதுமாக நம்பத் தயக்கம் காட்டலாம். நமக்குப் புரியாத புதிராக சில காரியங்கள் இருந்தாலும் கடவுளை நாம் முழுமையாக நம்பப் பழகிக் கொள்ளவேண்டும் . கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை . கடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் மலையையும் பெயர்க்கலாம் என இயேசு கூறுகிறார். எனவே மார்த்தாள் மெளனமாக நடக்கவிருப்பதை நம்பிக்கையோடு கவனிக்கத் தொடங்கினாள் .

அடுத்து இயேசுவைக் கண்கள் உற்று நோக்குவதை நாம் காணலாம். ஆனால் சில பார்வைகள் நம்பிக்கையோடும் , சில அவநம்பிக்கையோடும் , வேறு சில வெறுப்போடும் , இன்னும் சில அவருக்குத் தோல்வியே கிட்டவேண்டும் என்ற தீய எண்ணங்களோடும் நோக்குவதை நாம் காணலாம்.



அடுத்து நாம் என்ன காண்கிறோம் – இயேசு கல்லறைக்கு அருகில் லாசரின் உயிருக்காக செபிக்கவில்லை . மாறாக கடவுள் அவர் செபத்தை முன்னரே கேட்டுவிட்டார் என்ற உறுதிப்பாட்டோடு , இறைவா உமக்கு நன்றி எனக் கூறுகிறார் . கடவுள் தந்தை இயேசுவின் செபத்தைக் கேட்டுவிட்டார் என்பதை இயேசு நன்றாக உணர்ந்துவிட்டார். புதுமையாக , மிகப்பெரிய அருஞ்செயல் நடக்கப்போவதை உணர்கிறார். இதைத்தான் இயேசு விசுவாசம் என்பது கடவுள் மீது குறையாத பற்று என நமக்குக் கூறுகிறார். இவையே நம் செபங்கள் கேட்கப்படுவதற்கு வேண்டிய நிபந்தனைகள் . நாம் எதிர்பார்த்தவை நடக்கும் என்ற நம்பிக்கை . அவசரமான நமது உலகிலே இது நமக்கு விந்தையாகத் தெரியலாம் . நம்முடைய அனுபவங்களுக்கு அப்பாற்பட்டதாகத் தெரியலாம். தூய மாற்கு நற்செய்தி அதி.11 , திருவசனம் 24 இவ்வாறு கூறுகிறது . நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள் . நீங்கள் கேட்டபடியே நடக்கும் என்கிறார் இயேசு. அவ்வாறே இயேசு செய்தார் . நம்மையும் செய்யுமாறு சொல்கிறார். நாமும் அவ்வாறே செய்தால் செபம் நமக்கு ஓர் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் .

எனவே லாசர் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்து நம் பொருட்டு அருள் மழையைப் பொழிவார் என்பதை நாம் உணரவேண்டும் . நம்மைக் கட்டி அடிமைப்படுத்தும் துன்பங்களிலிருந்தும் அவர் வெளியே நம்மை வரச்சொல்லி ஆணையிடுகிறார். நாமும் புதிய வாழ்வினைத் தொடங்குவோம் . கடவுளைப் சிக்கெனப்பற்றிக்கொள்வோம் . நம்பியபிறகு வழியில் தடம் மாறாதிருப்போம் . லாசரைப்போல நாமும் புத்துயிர் பெறுவோம் .








All the contents on this site are copyrighted ©.