பெய்ஜிங் கத்தோலிக்க மறைமாவட்டம், முதல் தடவையாக பொதுநிலையினருக்கு மறைக்கல்வி பயிற்சி
நடத்தியுள்ளது
ஆக.07,2009 சீனாவின் பெய்ஜிங் கத்தோலிக்க மறைமாவட்டம், முதல் தடவையாக பொதுநிலையினருக்கு
மறைக்கல்வி பயிற்சி நடத்தியுள்ளது என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
கடந்த
ஜூலை இறுதியில் நடத்தப்பட்ட பத்து நாள் மறைக்கல்வி பயிற்சியில் இருபதுக்கும் மேற்பட்ட
பங்குகளிலிருந்து கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட பொதுநிலை விசுவாசிகளுக்கு கத்தோலிக்கத்
திருச்சபையின் மறைக்கல்வி புத்தகம் மற்றும் சில புத்தகங்கள் பாடத் திட்டங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டன.
நற்செய்திப்
பணியில் ஐம்பது வருட அனுபவம் மற்றும் தாய்வான் ஆயர்களுடன் பணி செய்து அனுபவத்தைப் பெற்றுள்ள
ஜெர்மன் நாட்டுப் பொதுநிலை விசுவாசி ஹெலன் ரெய்ச்சல் என்பவர் இந்த மறைக்கல்வி பயிற்சியை
நடத்தினார்.
இப்பயிற்சியில் உரையாற்றிய பெய்ஜிங் ஆயர் ஜோசப் லி ஷான், சாதாரணமாக
ஆண்டுக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வீதம் இம்மறைமாவட்டம் திருமுழுக்கு அளித்து வருகின்றது,
இம்மறைமாவட்டத்தில் அதிகரித்து வரும் மேய்ப்புப்பணி தேவைகளை முன்னிட்டு 2010ம் ஆண்டுக்குள்
ஆறு ஆலயங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.