பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டங்கள் இரத்து செய்யப்பட கத்தோலிக்க ஆயர்கள் மீண்டும் அழைப்பு
ஆக.,2009. பாகிஸ்தானில் அமலில் இருக்கும் தேவநிந்தனை சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன
மற்றும் சிறுபான்மையினருக்குப் பிரச்சனைகளைக் கொடுக்கின்றன என்று சொல்லி தேவநிந்தனை சட்டங்களை
இரத்து செய்யுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அரசுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
பஞ்சாப்
மாகாணத்தில் இடம் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து திருச்சபை
நடத்திய நிருபர் கூட்டங்களில் கவலை தெரிவித்த ஆயர்கள், பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டங்கள்
திரும்பப் பெறுமாறு வேண்டு கோள் விடுத்தனர்.
மக்களும் பாதுகாப்புப் படைகளும் விழிப்புடன்
இருந்திருந்தால் கொலைகளையும் வீடுகள் அழிக்கப்பட்டதையும் தவிர்த்திருக்க முடியும் என்று
கராச்சி பேராயர் எவரிஸ்ட் பின்டோ அக் கூட்டத்தில் கூறினார்.
ஆகஸ்ட் முதல் தேதி
கோஜ்ரா கிராமத்தில் இடம் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் பலியானவர்கள்
மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும், இவ்வன்முறை குறித்து
பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நிருபர் கூட்டங்களில் கத்தோலிக்க ஆயர்கள் அரசுக்கு
வேண்டுகோள் விடுத்தனர்.