2009-07-31 15:07:22

கர்நாடக மாநிலத்தில் கத்தோலிக்கக் குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்


ஜூலை31,2009. இந்தியாவின் மங்களூருக்கு அருகில் கத்தோலிக்கக் குரு ஒருவர் சாலையோரத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தது இவ்வியாழன் காலை கண்டு பிடிக்கப்பட்டது.

பெல்த்தன்காடி சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றும் 39 வயதாகும் அருள்திரு ஜேம்ஸ் முகலெல், தோட்டத்தடி பங்கில் ஓர் அடக்கச் சடங்கை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும் வழியில் கொல்லப்பட்டுள்ளார் என்று அம்மறைமாவட்ட சமூகநல மைய இயக்குனர் அருள்திரு தாமஸ் கனன்கல் கூறினார்.

அருள்திரு முகலெலின் சடலம் நிர்வாணமாக அவரது மோட்டார் வாகனத்திலிருந்து வெகு தூரத்தில் கிடந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியாகத் தெரிவதாகவும், அவரது உடம்பில் காயங்கள் இல்லையெனினும் மூச்சுத்திணறியதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அருள்திரு கனன்கல் கூறினார்.

கேரளாவின் தெல்லிச்சேரி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு முகலெல் கர்நாடக மாநிலத்தின் பெல்த்தன்காடியில் மறைப்பணியாற்றத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

 








All the contents on this site are copyrighted ©.