அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.2 அவன்
தன் ஊழியரிடம், ' இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச்
செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார் ' என்று கூறினான்.3 ஏரோது தன்
சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில்
அடைத்திருந்தான்.4 ஏனெனில் யோவான் அவனிடம், ' நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல ' என்று
சொல்லிவந்தார்.5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை
ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.6 ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின்
மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.7 அதனால் அவள் எதைக் கேட்டாலும்
அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே,
' திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும் ' என்று கேட்டாள்.9
இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக்
கொடுக்கக் கட்டளையிட்டான்;10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.11
அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான்.
அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.12 யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச்
சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.