காலையில் சரியான நேரத்துக்கு வந்து திராட்சைத் தோட்டத்தில் தங்கள் வேலைகளைத் தொடங்கி
மாலையில் தங்கள் பணிகளை உரிய நேரத்தில் ஒரு குழுவினர் முடிக்கின்றார்கள் . அவர்களிடம்
தோட்டத்து முதலாளி ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்பதைப் பேசிக் கொண்டார் . வைத்துக்கொள்வோமே
நூற்றைம்பது ரூபாய் சம்பளம் என நாள்கூலி பேசிக்கொண்டார் .
தோட்டத்து உரிமையாளரால்
சில மணிநேரம் காலதாமதத்துக்குப் பிறகு வேறு சிலர் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்
. இன்னும் சிலர் பணி முடியப்போகும் நேரத்திலும் சிலர் வந்து சேர்ந்து கொள்கிறார்கள் .
மாலையில்
பணி முடிகிறது . அன்றாடம் ஊதியம் வழங்கும் முறைப்படி எல்லோரும் அழைக்கப்பட்டு சம்பளத்தைப்
பட்டுவாடாச் செய்யப்படுகிறார்கள் . அப்பொழுது கடைசியில் வந்தவர்களுக்கும் முதலில் வந்த
மற்றவர்களுக்கும் ஒரு நாள் ஊதியமாகிய நூற்றைம்பது ரூபாயை கொடுக்குமாறு முதலாளி கணக்கரிடம்
கூறுகிறார் .தோட்டத்துக் கணக்கப்பிள்ளை அவ்வாறே வழங்குகிறார். காலையில் முதலாவதாக வந்தவர்களுக்கும்
அதாவது கடைசியில் வந்தவர்களுக்குக் ஒரே ஊதியமே ரூபாய் 150 கொடுக்கப்படுகிறது .
காலையில்
முதலில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வந்ததால் கடைசியில் வந்தவர்களைவிட
சற்று அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் . ஆனால் எல்லோருக்குமே
ஒரே மாதிரியான சம்பளமே கொடுக்கப்பட்டதால் முதலில் வந்தவர்கள் முணுமுணுத்தார்கள் . தங்களுக்கு
அதிகம் தரப்படவேண்டும் எனக் கேட்டார்கள். அதற்கு கடைசியில் வந்த ஒருவருக்கும் முதலில்
வந்தவரகளுக்குக் கொடுத்தபடியே கொடுப்பது தம் விருப்பம் எனத் தெரிவித்துவிடுகிறார் .
இவ்வாறு
கடைசியானோர் முதன்மையாவர் என இயேசு தெரிவிக்கிறார் .
கடைசியில் வந்தவருக்கும்
குடும்பம் இருக்கிறது . அவருக்கும் செலவுகள் மற்றவரைப்போலவே இருக்கும் . அவர் காலையிலிருந்து
வேலைக்காகக் காத்திருந்தார் .அவருக்கு வேலையும் தேவைப்பட்டது . பணமும் தேவைப்பட்டது.
ஒருவேளை அந்த ஆள் சோம்பேறியாக இருந்தார் என வைத்துக்கொள்வோம் . அப்பொழுதும் தோட்டத்து
உரிமையாளர் முழுச் சம்பளத்தையும் வழங்கியிருப்பாரா . வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம்
. ஆம் அந்த ஆளுடைய தேவைதான் அந்த நேரத்தில் சிந்திக்கப்படவேண்டியது . அவருக்கு அவர்
குடும்பத்துக்கு பணம் தேவை . எனவே தோட்டத்துத் தொழிலாளி தாராளமாக முழுச் சம்பளத்தையும்
கொடுப்பார் . காணாமற்போன மகன் உவமையில் இளைய மகனை பாசமுள்ள தந்தை வரவேற்றது போல கடவுள்
தந்தையும் இரக்கப்பெருக்கானவர் . வானமும் பூமியும் கீழ்த்திசையும் மேற்திசையும் எவ்வளவு
தொலைவோ அந்த அளவுக்கு கடவுளுடைய மன்னி்க்கும் , ஏற்றுக்கொள்ளும் தாராள உள்ளமும் மனிதருடைய
குறுகிய நோக்கும் வேறுபட்டதாகக் கதை தெரிவிக்கிறது . கதை வலியுறுத்திக்கூற வந்த கருத்து
கடவுள் தம் விருப்பப்படி நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழியச் செய்வார் .
நாம்
நினைப்பது போல கடவுள் தரும் பரிசு நமது வேலை போன்ற நம் செயல்களைப் பொறுத்தது அல்ல . திராட்சைத்
தோட்ட வேலையாள்கள் உவமை நம்மில் யாரும் கடவுளிடம் காரணம் காட்டி பரிசு பெறமுடியாது .
அவர் மன்னவர் . மாபெரும் பரிசை நாம் கேட்காமலும் தருவார் .
முதலில் வந்தவர்கள்
முணுமுணுப்பது கால நேரத்தைக் கணக்கிட்டுச் சம்பளம் தரப்படும்போது சரியானதாகத் தெரிகிறது
. ஆனால் கடவுளின் பேரிரக்கத்தையும் கடல்போன்ற தாராளமனத்தையும் கணக்கெடுக்கும்போது முணுமுணுப்பது
தவறு. மாசில்லாத கடவுள் முன்னர் பாவிகளாகிய மனிதர் நாம் எத்தனை மன்னிப்புக் கேட்டு குற்றத்துக்கு
நிவாரணம் செய்தாலும் கடவுளுக்கு எதிராகக் செய்யப்படும் குற்றத்துக்கு மன்னிப்பு உண்டா
. உண்டு ஏனெனில் கடவுள் உலகின்மீது கொண்ட அன்பின் காரணத்தாலேயே தம் ஒரே மகனையே சிலுவைச்
சாவுக்குக் கையளித்தார் .
கடவுளிடம் நாம் ஒரு மணல் மணிமட்டும் வேண்டும் எனக்
கேட்டால் கடற்கரையையே நமக்குத் தருவார் . ஒரு நட்சத்திரம் கேட்டால் எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்
புதிய புதிய நட்சத்திர உலகங்களையே நம் கண்ணுக்கு விருந்தாகத் தருவார் .
மனிதர்கள்
நாம் நாம் நம் மனிதச் சிந்தைப்படி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கலாம் . ஆனால் கடவுளின்
கணக்கில்லாத தன்மையை நம்முடைய கணக்குப்பார்க்கும் சிந்தனைகளும் சுயநலம் தேடும் போக்கும்
புரிந்து கொள்ளவே முடியாது .
நாம் கடவுள் பிறருக்கு அளிக்கும் கோடி நன்மைகளுக்காக
நன்றி கூறவேண்டுமே யொழிய முணுமுணுக்கக் கூடாது . காலையில் பணிக்கு முதலில் வந்தவர்களுக்கு
வயிற்றெரிச்சல் . காணாமற்போன மகன் உவமையில் மூத்த மகனுக்கு வயிற்றெரிச்சல் . காணாமல்
போன ஆட்டைத்தேடிச் செல்பவர் கடவுள். அந்தப் பேரன்பு நமக்கு கொஞ்சமாவது வேண்டும் . கடவுள்
கணக்குப் பார்ப்பதை விரும்புவதில்லை என இன்றைய உவமை நமக்குக் கூறுகிறது . கடவுள் நாம்
கேட்பது அனைத்தையும் கேளாதனவற்றையும் அமுக்கிக் குலுக்கித் தருவார் . பள்ளிக்கணக்கு அவரிடம்
செல்லாது .
அன்பில்லாத முழு நேரம் வேலை செய்தவர்களின் சிந்தனையும் கடவுளின் தாராளமனப்பாங்கும்
கதையில் தெளிவாக்கப்படுகின்றன .
நாம் வான்வீட்டைச் சம்பாதிக்க வேண்டும் என்பது
கடவுளுக்கு ஒவ்வாத கொள்கை என இன்றைய உவமை கூறுகிறது . கடவுளின் அருள பாய்ந்து வரும்
வெள்ளம் . திருத்தூதர் பவுல் கூறுகிறார் – கடவுளின் அருளால் நீங்கள் மீட்கப்படுகிறீர்கள்
. நீங்கள் செய்யும் புண்ணிய பலன்களால் அல்ல எனத் தெளிவுறக் கூறுகிறார் . எல்லாம் கடவுளின்
கொடையே . நம்முடைய பணியால் நாம் சிறப்படைவதாக யாரும் பெருமை கொள்ளவேண்டாம் என்கிறார்
திருத்தூதர் பவுல் . நாம் பிறரையும் சிறப்புக் காரணமாக எடைபோடாது மனிதம் காரணமாக கடவுளின்
அன்புக்கு உரியவர் – அவர் அனைவரது மீட்புக்காகவும் தம் மகனை உலகுக்கு அனுப்பினார் என்பதை
நெஞ்சில் நிறுத்துவோம் .