இலங்கையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்குத் தலத்திருச்சபைப் பணியாளர்கள் நடவடிக்கை
ஜூலை08,2009 இலங்கையில் அதிகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக தலத்திருச்சபைப்
பணியாளர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கொசுக்களினால் பரவும் இந்த வெப்ப மண்டல
நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் மற்றும் பிற சமயங்களில்
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அப்பணியாளர்கள்.
இவ்வாண்டில் இதுவரை 13,692
பேர் டெங்கு காய்ச்சலால் தாக்கப்பட்டுள்ள வேளை, 160க்கும் அதிகமானவர்கள் இதனால் இறந்துள்ளனர்
என்று திருச்சபைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும், டெங்கு காய்ச்சல்
பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசு, பொதுமக்கள், தங்களின்
வாழ்விடங்களில் தேங்கியிருக்கும் நீரை சுத்தப்படுத்தாவிட்டால் அவர்களை கைது செய்யப் போவதாக
எச்சரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கென, கொசுக்களின் கூட்டுப்புழுக்களை
கொல்லக் கூடிய பாக்டீரியாவை கியூபாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை கொசுக்களின்
குஞ்சுபொரிக்கும் நீர்நிலைகளில் இலங்கை அதிகாரிகள் தெளித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.