2009-07-04 15:53:26

குருக்கள் கிறிஸ்துவைப் போல தன்னையே தியாகம் செய்து வானகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்களாக இருக்க வேண்டும், திருத்தந்தை


ஜூலை04,2009. பிரச்சனையும் சத்தம்சந்தடியும் நிறைந்த உலகில் குருக்கள் கிறிஸ்துவைப் போல தன்னையே தியாகம் செய்து வானகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

குருத்துவ இறையழைத்தல் பற்றி உரோமையில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தேசிய இறையழைத்தல் ஊக்குனர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட 120 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

குருத்துவ மேய்ப்புப்பணிக்கான இறையழைத்தல் பற்றிய ஆழமான உணர்வைப் பெறுவதற்கு இச்சர்வதேச குருக்கள் ஆண்டு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் உரைத்த அவர், இளையோரின் இறைவன் மற்றும் உண்மையான மகிழ்ச்சிக்கான தேடலில் அவர்களைத் திருச்சபை வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார்.

மனிதரின் இதயங்களில் இறையழைத்தலுக்கான விதையை எப்பொழுதும் விதைப்பவர் நம் ஆண்டவர் இயேசு மட்டுமே என்று கூறிய திருத்தந்தை, இறைவார்த்தை மிகுதியாகவும் தாராளமாகவும் விதைக்கப்பட்ட பின்னர் அது நம் வாழ்க்கையில் ஊடுருவி நம்மை உருவாக்கி வாழ்வைத் தேர்ந்து தெளிய உதவுகின்றது என்றும் கூறினார்.

இறைவார்த்தை நம் ஒவ்வொருவரிலும் ஆசீர்வாதமாகவும் ஆறுதலாகவும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையாகவும் இருக்கின்றது என்றும் இறையழைத்தல் ஊக்குனர்கள் நம்பிக்கை மற்றும் பற்றுறுதியை விதைப்பவர்கள் என்றும் ஐரோப்பிய இறையழைத்தல் ஊக்குனர்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

 








All the contents on this site are copyrighted ©.