2009-07-01 14:42:31

ஏமன் விமான விபத்து குறித்து திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்


ஜூலை01,2009 இச்செவ்வாயன்று இந்திய பெருங்கடலில் இடம் பெற்ற ஏமன் விமான விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, குவைத் திருப்பீடத் தூதுவர் பேராயர் பவுல் மௌன்ங்செத் எல்ஹாஸெம், இன்னும் ஏமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்திகளில் இவ்விமான விபத்தில் இறந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான திருத்தந்தையின் அனுதாபமும் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆப்ரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கோமோரோஸ் தீவில் இறங்க முயற்சித்த ஏமன் விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் 66 ப்ரெஞ்ச்க்காரர்கள் உட்பட 153 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 14 வயது சிறுமி தவிர மற்ற அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.










All the contents on this site are copyrighted ©.