2009-06-29 15:41:28

திருத்தந்தை தனது மூன்றாவது அப்போஸ்தலிக்கத் திருமடலில் கையெழுத்திட்டுள்ளார்




சூன்29,2009. காரித்தாஸ் இன் வெரித்தாத்தே அதாவது உண்மையில் பிறரன்பு என்ற தலைப்பிலான தனது மூன்றாவது அப்போஸ்தலிக்கத் திருமடலில் தான் கையெழுத்திட்டுள்ளதாக இன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, ஜூன் 29ம் தேதியிட்ட தனது மூன்றாவது அப்போஸ்தலிக்கத் திருமடல் விரைவில் வெளியிடப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இது, 1967ம் வருடம் திருத்தந்தை ஆறாம் பவுல் வெளியிட்ட போப்புலோரும் புரோகிரெஸ்ஸியோ – மக்களின் முன்னேற்றம் என்ற அப்போஸ்தலிக்கத் திருமடலின் முக்கிய கருத்துக்களை ஆதாரமாய்க் கொண்டதாய் நவீன காலத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான சில கூறுகளை ஆராய்வதாய் இருக்கும் என்றும் கூறினார்.

உலகப் போக்குப்படி ஒழுகாமல் நற்செய்தியின் துணையில் உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பட வழிவிடுங்கள் என்ற புனித பவுலின் வார்த்தைகளுடன் இச்செப உரையைத் தொடங்கிய அவர், உரோம் நகர் பெற்றுள்ள விசுவாசம் மேலும் தூண்டப்பட்டு மனிதாபிமானம் மற்றும் நற்செய்தி மதிப்பீடுகளின் சூழலை அந்நகரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உருவாக்க வேண்டுமெனவும் அழைப்புவிடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.