முஸ்லீம்களுடனான உறவுகளில் அண்மை ஆண்டுகளில் முன்னேற்றம்
சூன்23,2009 முஸ்லீம்களுடனான உறவுகளில் அண்மை ஆண்டுகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும்,
மதமாற்றம் வழிபாட்டுச் சுதந்திரம் ஆகிய விவகாரங்களைப் பொருத்தவரை பிரச்சனைகள் இன்னும்
இருக்கின்றன என்று திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கூறினார்.
பல்சமய
உரையாடலில் ஈடுபடும் உயர்மட்ட முஸ்லீம் தலைவர்களிடம் வெளிப்படும் மிகுந்த திறந்த மனப்பான்மை,
சாதாரண முஸ்லீம்களின் செயல்களால் பாதிக்கப்படுகின்றது என்றுரைத்த கர்தினால் ஜான் லூயி
தவ்ரான், இது முஸ்லீம்களுடனான உறவுகளுக்கு மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கின்றது
என்று கூறினார்.
இத்தாலியின் வெனிஸ் நகர் பிதாப்பிதாவால் 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட
ஒயாசிஸ் என்ற பத்திரிகை ஏற்பாடு செய்த இரண்டு நாள் கருத்தரங்கில் இத்திங்களன்று உரையாற்றிய
கர்தினால் தவ்ரான், வத்திக்கான் முஸ்லீம்களுடன் நடத்தியுள்ள பல்வேறு உரையாடல்கள் மிகுந்த
நம்பிக்கை நிறைந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதையும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில்
ஸ்பெயினில் நடைபெற்ற உரையாடல் பற்றிய சர்வதேச கருத்தரங்கு உட்பட அண்மை பல்சமய உரையாடல்
கூட்டங்களில் சமய சுதந்திரம் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் அடங்கிய அறிக்கைகள் கொள்கை
அளவில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.