2009-06-17 16:00:54

கடந்த ஆண்டில் ஏறத்தாழ நான்கு கோடியே இருபது இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்


சூன்17,2009. உலகில் கடந்த ஆண்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, ஏறத்தாழ நான்கு கோடியே இருபது இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்தது.

2008ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரத்தை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ள UNHCR என்ற ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனம், இவ்வெண்ணிக்கை, 2007ம் ஆண்டைவிட ஏழு இலட்சத்துக்கு மேல் குறைவாக இருந்தாலும், 2009ம் ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை இதைவிட அதிகரித்துள்ளது என்று அறிவித்தது.

சூன்20, வருகிற சனிக்கிழமையன்று உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள UNHCR நிறுவனம், இவ்வாண்டில் இலங்கை, பாகிஸ்தான், சொமாலியா போன்ற நாடுகளில் புதிதாக இடம் பெற்றுள்ள புலம் பெயர்வுகள் இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள ஒரு கோடியே அறுபது இலட்சம் அகதிகளுள் சுமார் 80 விழுக்காட்டினரும் உள்நாட்டிலே புலம் பெயர்ந்துள்ள இரண்டு கோடியே அறுபது இலட்சம் பேரில் பெரும்பான்மையினரும் வளரும் நாடுகளைச் சேர்ந்தோர் என்று “குளோபல் ட்ரென்ட்ஸ்” என்ற அந்நிறுவன அறிக்கை கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.