இலங்கையில் புலம் பெயரும் மக்களுக்கு காரித்தாஸ் உதவி
மே30,2009. இலங்கையின் வன்னி மற்றும் வவுனியா முகாம்களில் புலம் பெயரும் மக்களின் எண்ணிக்கை
அதிகரித்து வரும் வேளை, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அம்மக்களுக்கு உதவி
செய்வதற்கென தனது பணியாளர்களை வவுனியாவுக்கு அனுப்பியுள்ளதாக அவ்வமைப்பின் இயக்குனர்
அருட்திரு டேமியன் பெர்னாண்டோ கூறினார்.
வீடற்ற அம்மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும்,
அனைத்து இலங்கை மக்கள் மத்தியில் நீதியும் அமைதியும் நிறைந்த சூழல் உருவாகவும் காரித்தாஸ்
உழைக்கும் என்றும் குரு டேமியன் கூறினார்.
மேலும், இலங்கைத் தமிழ் விடுதலைப் புலிகளுக்காகப்
போரிட கட்டாயப்படுத்தப்பட்ட சிறார் படைவீரருக்கென, நான்கு உளவியல் ரீதியான மறுவாழ்வு
மையங்களை ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் அமைத்துள்ளது அந்நாட்டு அரசு.
அரசின்
மறுவாழ்வு திட்டத்தில் தற்சமயம் 400 சிறார் படைவீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளவேளை, அகதிகள்
முகாம்களில் புலம் பெயர்ந்த மக்களோடு வாழும் சிறார் படைவீரர்களையும் கண்டுபிடிக்கும்
பணியிலும் அரசு ஈடுபட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.