வடகொரியாவின் அணுப்பரிசோதனை உலகில் அனைத்து அணுஆயுதங்களையும் ஒழிப்பதற்கானத் தேவையை
நினைவுபடுத்துகின்றது, உலக கிறிஸ்தவ சபைகள் அவை
மே27,2009. வடகொரியா அணுப்பரிசோதனையை நடத்தியிருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள
அதேவேளை, உலகில் அனைத்து அணுஆயுதங்களையும் ஒழிப்பதற்கானத் தேவையை இந்நடவடிக்கை மீண்டும்
நினைவுபடுத்துகின்றது என்று டபுள்யு சி சி என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவை கூறியுள்ளது.
டபுள்யு.
சி. சி. அவைத் தலைவர் பாஸ்டர் சாமுவேல் கோபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின்
அணுப்பரிசோதனை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, அதேசமயம் அந்நாட்டு மக்கள் மற்றும்
அதன் அண்டை நாடுகள் மீது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பத்து
ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் நடைபெற்ற அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்
பற்றிய கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றிப் பாராட்டியுள்ள கோபியா, அக்கூட்டத்தில் வடகொரியா,
பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பங்கு பெறாதது துரதிஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அணுஆயுதங்கள்
கடவுளுக்கும் மனித சமுதாயத்திற்கும் எதிரான பாவம் என்று சொல்லி இவற்றுக்கு எதிராய்க்
கண்டனம் தெரிவிக்குமாறு தனது அங்கத்தினர் கிறிஸ்தவ சபைகளை வலியுறுத்தியுள்ளார் பாஸ்டர்
சாமுவேல் கோபியா.