2009-05-23 13:33:45

குருக்கள் செபத்தில் ஆழமாக வேரூன்றிய மனிதர்களாக வாழ திருத்தந்தை அழைப்பு


மே23,2009. செபத்தில் ஆழமாக வேரூன்றிய மனிதர்களாகவும், கிறிஸ்துவோடுடனான அன்பிலும் வாழ்விலும் ஒன்றித்திருப்பவர்களாகவும் குருக்கள் தங்களை உருவாக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீட திருச்சபை கல்வி நிறுவனத்தில் திருப்பீடத் தூதரகப் பணிகளுக்கெனப் பயிலும் நாற்பது குருக்கள் மாணவரை இன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இத்தகைய உறுதியான ஆன்மீக்ததில் அடிப்படையைக் கொண்டிராமல் அவர்கள் தங்களது திருப்பணியை ஆற்ற இயலாது என்றார்.

இயேசுவின் திருஇதயப் பெருவிழா மற்றும் குருத்துவப் புனிதத்துவத்திற்கானத் தினமான வருகிற ஜூன் 19ம் தேதி தொடங்கும் குருக்கள் ஆண்டு, குருத்துவ அழைத்தலை ஆழப்படுத்துவதற்கும் புதுப்பிப்பதற்கும் ஏற்றதாக அமையும் என்றும் அவர் கூறினார்.

திருப்பீடத் தூதரகங்களில் பணி செய்வது ஒருவகையில் சிறப்பான குருத்துவ அழைத்தல் எனக்கூறிய திருத்தந்தை, வாழ்வின் இருளான மற்றும் உள்ளத்தில் இன்னல்களை எதிர்நோக்கும் தருணங்களில் கிறிஸ்துவை உற்று நோக்குமாறும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.