திருத்தந்தை ஜோர்டானின் அம்மனில் உள்ள கிரேக்க மெல்கிதே கத்தோலிக்க சபையின் தூய ஜார்ஜ்
பேராலயத்தில் சென்ற மே 09 சனிக்கிழமை மாலை வழிபாட்டில் கலந்து கொண்டார் . அங்கு மாலை
5.30 மணி . இந்திய நேரம் இரவு 8.00 மணி .
இந்தப் பேராலயத்தின் பேராயராக யாசர்
அய்யாக் பொறுப்பில் இருக்கிறார் . அக்டோபர் 13 , 2007 ல் இந்தப் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது
. அதே நாளில் அப்பேராலயத்தில் யாசர் அய்யாக் பேராயராக கீழைத் திருச்சபைகளின் மேதகு பிதாப்பிதா
மூன்றாவது கிரகோரி லாகெம் அவர்களால் அபிசேகம் செய்யப்பட்டார . அவ்வாலயத்தில் 1000 பேர்
வரை அமரமுடியும் .
ஜோர்டானின் தலைநகர் அம்மனில் நடந்த இந்த முதல் செப வழிபாட்டின்போது
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கிரேக்க கத்தோலிக்க சபையின் முக்கியத்
தலைவர்களுக்கு மறையுரை வழங்கினார். வழிபாட்டின்போது பிதாப்பிதா 3 ஆவது கிரகோரியோலாகெம்
, டமாஸ்கசின் கிரேக்க மெல்கிதே பிதாப்பிதா முந்நாள் பேராயர் ஜார்ஜ் எல்மூர் , பேராயர்
யாசர் அய்யாக் , மற்றும் மாரநாதா , சிரியன் , அர்மீனியன் , கல்தேய , இலத்தீன் ரீதி திருச்சபையைச்
சேர்ந்தவர்கள் மாலை செப வழிபாட்டில் பங்கேற்றனர் . கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபையின் பேராயர்
பெனதிக்கோஸ் சிக்கோராஸ் அவர்களும் செப வழிபாட்டில் பங்கேற்றார் . மற்றும் குருக்கள் ,
இருபால் துறவியர் , குருகுல மாணவர்கள் , திருச்சபையின் முக்கிய நிறுவன உறுப்பினர்களும்
பங்கேற்றனர் .
தமது மறையுரையின்போது அங்குள்ள கிறிஸ்தவச் சிறுபான்மையினர் பொதுமக்களிடையே
தமது குரல் கேட்குமாறு வாழ அறிவுறுத்தினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . ஒழுக்க நெறிகளை
வரம்புக்கு மேல் மீறும்போது இஸ்லாமியரோடு இணைந்து கிறிஸ்தவர்களும் அதைத் தடுக்குமாறு
வேண்டுகோள் வைத்தார் . கீழைத்திருச்சபை தமது பாரம்பரிய நெறிமுறைகளால் கிறிஸ்துவிடம்
மற்றவர்களைக் கொண்டுவர பலவிதப் பாதைகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் . அங்கிருந்த அனைவரோடும்
இணைந்து சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட வழிபாட்டில் பங்கேற்கும் வாய்ப்பினுக்கு நன்றி
கூறினார் .பல நூறு ஆண்டுகளாக திருப்பயணங்களைக் மேற்கொண்ட திருச்சபை பல்வேறு வரலாற்று
முத்திரைகளையும் கலாச்சாரத்தின் பெருமையையும் தன்னிடம் கொண்டுள்ளது எனக் கூறினார் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் . சில சமயங்களில் இந்த வரலாற்றில் சமய வேறுபாடு காரணமாக விவாதங்களும்
, அடக்குமுறைகளும் கையாளப்பட்டது வருத்தம் தரக்கூடியது என்றார் . ஒப்புரவை வலியுறுத்திய
காலங்களும் இருந்திருக்கின்றன . அவை வியத்தகு முறையி்ல் கத்தோலிக்கத் திருச்சபையோடு நல்லுறவை
வளர்த்துள்ளன என்றும் , கலாச்சாரா மேம்பாட்டுக்கு கீழைக் கிறிஸ்தவ திருச்சபைகள் வழிவகுத்துள்ளன
என்றும் திருத்தந்தை மகிழ்ச்சி தெரிவித்தார் . கத்தோலிக்க சபைக்குள் பல வகைப்பட்ட சபைகள்
அகில உலகத் திருச்சபையின் இவ்வுலகத் திருப்பயணத்தில் நல்ல தாக்கத்தைத் தந்துள்ளதாகவும்
திருத்தந்தை தெரிவித்தார் . ஆன்மீகத்தில் , வழிபாட்டில் , பாரம்பரியத்தில் கடவுளின் நன்மைத்தனத்தையும்
, திருவுளத்தையும் இச்சபைகள் வெளிப்படுத்தியுள்ளன என்றார் திருத்தந்தை . இச்சபைகள் அனைவரையும்
கடவுள் பால் கொண்டு செல்வதை நாம் வரலாற்றில் காண்கிறோம் என மேலும் தெரிவித்தார் . கீழைத்
திருச்சபை அகில உலகத் திருச்சபைக்கு மெருகூட்டுவதாக , சிறப்பிப்பதாகவும் திருத்தந்தை
தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் . புனித ஜார்ஜ் செய்தது போல எல்லோரையும் கிறிஸ்துவை அறியவும்
அன்பு செய்யவும் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஆண்டவர் விட்டுச் சென்ற கட்டளைக்கு செவிமடுக்கவேண்டும்
என அறைகூவல் விடுத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .
கிரேக்க மெல்கித தூய
ஜார்ஜ் பேராலய வழிபாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் தம் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்த
திருத்தந்தை அவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகக் கூறி தமக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டு
அன்றைய மாலை வழிபாட்டைத் நிறைவு செய்தார் . அங்கிருந்து திருத்தந்தை அம்மனின் வத்திக்கான்
அரசுத் தூதர் மாளிகைக்கு மாலை 7 மணிக்கு , இந்திய நேரம் இரவு 10.30 க்குக் காரில் சென்றடைந்தார்
.