நாடுகள் அணுஆயுத ஒழிப்பை ஊக்குவிக்கத் திருப்பீடம் அழைப்பு
மே06,2009. நாடுகள் மத்தியில் நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் அமைதியை வளர்ப்பதற்கு அணுஆயுதங்கள்
ஒழிக்கப்படவும் ஆயுதப் பரவல் நிறுத்தப்படவும் சர்வதேச சமுதாயம் ஊக்குவிக்குமாறு அழைப்புவிடுத்தார்
திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைப் பரிசீலனை
செய்யும் 2010ம் ஆண்டின் கூட்டத்திற்கானத் தயாரிப்புக் குழுவில் இச்செவ்வாயன்று உரையாற்றிய,
ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே இவ்வாறு
கேட்டுக் கொண்டார்.
கடந்த 40 வருடங்களாக சர்வதேச சமுதாயத்தின் நற்பணிக்குத் தன்னை
அர்ப்பணித்துள்ள திருப்பீடம், இந்த ஒப்பந்தத்திற்குத் உறுதியான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கின்றது
என்பதைக் கோடிட்டுக் காட்டினார் அவர்.
உலகில் 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணுஆயுதங்கள்
இன்னும் இருக்கின்றன என்ற பேராயர் மிலியோரே, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் சட்டரீதியாக
நாடுகளைக் கட்டுப்படுத்தினாலும் இன்றும் சிலநாடுகள் இந்த அணுக்கதுழுவில் சேர்வதற்கு முனைப்பாக
இருக்கின்றன என்றார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களில்
அணுஆயுத ஒழிப்பும் ஆயுதப் பரவல் தடையும் மைய இடத்தில் இருப்பதும் இது குறித்த நாடுகளின்
முயற்சியும் ஊக்கமூட்டுவதாகவும் இருக்கின்றன, எனினும் இந்த ஆயுத ஒழிப்புக்குத் தெளிவான
மற்றும் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் திருப்பீடம் விரும்புகிறது என்றும்
பேராயர் கூறினார்.