பன்றிக் காய்ச்சல் தற்காப்பு நடவடிக்கைகளைப் பல நாடுகளின் கத்தோலிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
மே02,2009. உலகின் பல நாடுகளில் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள வேளை, பல
நாடுகளின் கத்தோலிக்க அதிகாரிகள் குருக்களுக்கும் விசுவாசிகளுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள்
அடங்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
குருக்கள் மறையுரைகள் ஐந்து நிமிடங்களாகக்
குறைக்குமாறும் ஒப்புரவு அருட்சாதனத்தைக் கேட்கும் போது மூக்கு வாய் ஆகியவற்றிக்கு மூடுதிரைகளைப்
பயன்படுத்துமாறும் பங்கு மக்கள் சிறாரையும் முதியோரையும் ஆலயத்திற்கு அழைத்து வரவேண்டாமெனவும்
கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
குருவானவர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையைக்
கையாண்டால் திருமணங்கள் மற்றும் திருமுழுக்கு அருட்சாதனங்களைத் தனியாக நடத்தலாம் என்று
மெக்சிகோ நகர் பேராயர் சொல்லியுள்ளார்.
நற்கருணையை திருப்பலி பாத்திரத்தில் தோய்த்து
நாக்கில் வழங்குவதையும் சமாதான நேரத்தில் கைகுலுக்குவதையும் நியுசிலாந்தில் தற்காலிகமாக
நிறுத்தி வைத்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் மெக்ஸிகோவில் 160க்கும் அதிகமானோர்
பலியாகியுள்ளனர். ஹாங்காங்குக்கு வந்த மெக்ஸிகோ நாட்டு குடிமகன் ஒருவரில் இந்நோய்க்கிருமி
காணப்பட்டதாக, ஹாங்காங்க் தலைமை அதிகாரி டொனால்ட் சாங் தெரிவித்துள்ளார். .