சுற்றுலா மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் பொழுதுபோக்குகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆன்மீகக்
காரியங்களிலும் அக்கறை செலுத்த அழைப்பு, திருப்பீட உயர் அதிகாரி
ஏப்.29,2009. கிறிஸ்தவத்துக்கு விடுமுறை கிடையாது என்பதால் சுற்றுலா மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள்
பொழுதுபோக்குகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆன்மீகக் காரியங்களிலும் அக்கறை செலுத்துமாறு
கேட்டுக் கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
சுற்றுலா பயணிகளுக்கானத் திருப்பீட
மேய்ப்புப்பணி அவை வத்திக்கானில் இன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய
அத்திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ, தேசிய, மறைமாவட்ட மற்றும்
பங்கு அளவில் சுற்றுலா பயணிகளுக்கான மேய்ப்புப்பணித் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுமாறு
வலியுறுத்தினார்.
சுற்றுலாவும் திருச்சபையின் மேய்ப்புப் பணியும் மனிதரின் ஆன்மீக
மற்றும் நன்னெறிக் கூறுகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட
மனிதன் பற்றிய உண்மையை மேய்ப்புப்பணி இறையியல் மிக ஆழமாக ஆராய வேண்டும் என்றும் கூறினார்.
Peregrinans
in terra என்ற ஏடு வெளியிடப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
இதில் இருபது ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.